Saturday 17 August 2019

அவனும் அப்படித்தான்....

அந்தி சாயும் பொழுது, அனைத்து பறவைகளும் தத்தம் கூட்டினை நோக்கிப் பயணிக்க, எங்கோ ஓர் பறவை அந்த வானுயர்ந்த கட்டிடத்தின் விட்டத்தில் அமர்ந்து யாருக்கோ, எதற்கோ கூவிக் கொண்டிருந்தது. அதன் கூக்குரலை யார் கேட்டரோ தெரியவில்லை, நான் கேட்க வேண்டியதாயிற்று. அந்த கட்டிடத்தில் தான் நான் தேடி வந்தவர் இருந்தார். அவர் என்னை மொட்டை மாடியில் நிற்க வைத்து விட்டு, இதோ வருகிறேன் என்று சென்றவர். வரவில்லை, காத்திருக்கிறேன். இப்போது கேட்டிக் கொண்டிருக்கிறேன்.
சுற்றி சுற்றி பார்க்கிறேன், அந்த பறவையின் கூக்குரல் கேட்டு எங்கிருந்தாவது யாரும் வருகிறார்களா என்று.
யாரும் வரவில்லை. எந்த திசையிலும் எதுவும் இந்த கட்டிடத்தினை நோக்கி எதுவும் வருவதாகத் தெரிவதில்லை.
மறுபடியும் பறவையினை நோக்கினேன். அப்போது தான் அந்த பறவையினை உற்று கவனித்தேன். ஆம், அந்த பறவையின் காலில் ஏதோ மாட்டிக் கொண்டிருந்தது. அது பறக்க முடியாமல் அந்த இடைஞ்சலால் தடுமாறிக் கொண்டிருந்தது.
தொடும் தூரத்தில் இல்லை அது, ஆனால் தொடக் கூடிய தூரத்தில் தான் இருந்தது. முயற்சித்தால் தொட்டு விடலாம்.
சரி, பிறகு எதற்காக வான் நோக்கி கரைகிறது. உதவி கேட்டா? பாவம் அதற்கு தெரியாது, இந்த மனிதர்கள், வடிவேல் சொன்னது போல், ””புறா தின்றதுக்கு போரா, ஒரே அக்கபோரா இல்லை இருக்கு””, என்று தங்கள் பாதையில் வேகமாக பயணித்து கொண்டிருந்தார்கள். நிச்சயமாக ஒரு பறவையின் குரல் அவர்களுக்கு கேட்டிருக்காது. மனிதர்களின் அவலமே கேட்காத பொழுது எப்படி இவர்களுக்கு அந்த பறவையின் குரல் கேட்கும். அந்த அலறல் சப்தம், மகிழுந்துகளின் சத்தத்தில், மக்களின் கூக்குரலில், ஆர்ப்பரிப்பில், அழுகுரலில், காற்றின் போக்கில் கரைந்து கொண்டிருந்தது.
இவன் உதவி செய்ய முடிவுசெய்தான், ஆனால் என்ன செய்ய என்று தெரியவில்லை.
அதன் குரல் இவனை என்னவோ செய்தது, எதையோ இழந்ததைப் போல் இவன் உணர்ந்தான்.
இவன் பறவையினை நோக்கி நகர்ந்தான். இவன் அந்த கட்டிடத்தின் உயரத்தில் இருந்தான். அந்த கட்டிடம் எப்படியும் 125 அடிக்கு மேலே இருக்கும். அங்கிருந்து நோக்கும் போது எப்படியும் அந்த நகரத்தின் பெரும் பகுதி அவன் கண்களுக்கு விருந்தாகியது. அந்த நகரத்தின் அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த பறவையின் குரல் கேட்டது. என்ன பறவை என்று தெரியாது. ஆனால் அதன் குரல் அவனுக்கு வலித்தது.
அந்த நகரம் உயரத்தில் இருந்து பார்க்கும் போது அழகாக இருப்பது போல் தோன்றியது. மனிதர்கள் எறும்புகளைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தார்கள், கட்டிடங்கள் எல்லாம் தீப்பெட்டிகள் போல அடுக்கப்பட்டிருந்தன. சாயும் சந்தி ஆகையால், விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன.....
அவன் அந்த பறவையின் அருகில் வந்து விட்டான். ஆகா, புறா அந்த கட்டிடத்தின் உயரத்தில் இருந்து கத்திக் கொண்டிருந்தது. ஏதோ வீட்டின் சாளரத்தில் இருந்த பொருளை தின்ன சென்றிருக்கும் போது அதன் கால்கள் அந்த நெகிழி பையில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். அதோடு பறந்து அந்த புறா அந்த கட்டிடத்தில் வந்து அமர்ந்து அந்த உணவைக் கொத்தி தின்றிருக்க வேண்டும். காற்றின் வேகத்தில் அந்த நெகிழி பை அதன் கால்களில் மாட்டியிருக்க வேண்டும். இப்போது அதனால் பறக்க முடியாமல் அந்த கால்கள் அந்த நெகிழி பையினால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால் அதை எடுக்க முடியவில்லை. முயன்று தோற்றதில் அதற்கு வேறு வழி தெரியாமல், கத்த ஆரம்பித்துவிட்டது.
அவனும் அப்படிதான், விடாமல் முயற்சிப்பான், ஒரு கட்டத்தில், ஏதேனும் சிக்கலில் மாட்டும் பொழுது,அதை விடுவிக்க முடியாமல் திணறும் பொழுது, அவன் தன் நம்பிக்கையினை இழப்பான், பின்னர் கொஞ்ச கொஞ்சமாக தன்னை முற்றிலும் தோற்றதாக நினைத்து, அவல குரல் எழுப்ப ஆரம்பிப்பான். அவன் அழுகை அவனுக்கே சில நேரம் எரிச்சல் அளிக்கும். இருந்தும் அழுவான். ஒரு சில நொடிகள் அவன் தொடர்ந்து முயற்சித்திருப்பானே ஆனால், அவன் அந்த சிரமத்தினை முற்றிலும் தோற்கடித்திருப்பான். ஆனால், அவன் இயலாமை, ஆற்றாமை, நம்பிக்கையின் தோல்வி, அவனை பின் வாங்க வைத்து, அவனை எரிச்சலூட்டி, அவனையே அது விழுங்கி விடுகிறது அந்த கோர எண்ணங்கள்.
அதை போல அந்த பறவை, அதன் அலகினால் நெகிழி பையினை கிழித்து குதறியிருக்கலாம், ஆனால் அதன் முயற்சி பறப்பதில் இருந்ததால், அதன் கால்களை அசைக்க முற்பட்டுக் கொண்டிருந்ததால், இந்த சிந்தனை வரவில்லை. விடா முயற்சிக்குப் பிறகு, அது உதவியினைத் தேடுகிறது.
துக்கத்தின் விளிம்பில் இருக்கும் அந்த பறவைக்கு இவன் உதவ முன் வந்தான். அவனுக்குத் தெரியும் என்ன செய்தால், அந்த பறவை பறக்க முடியுமென்று.
இவன் அருகில் வரவர அது பயந்து ஆக்ரோஷமாய் கூக்குரலிட்டது. எல்லா மனிதர்களைப் போல் இவனும் இருந்துவிட்டால் என்ன செய்ய. அதன் உருவம் அருகில் வரும்போது பார்த்தான், நல்ல பெருத்து அழகாய் வளர்ந்திருந்தது அந்த புறா. ஒருவேளை மாமிசம் உண்ணும் பழக்கமிருந்தால், அவன் வீட்டில் மறுநாள் புறாவிருந்தாயிருக்கும்.
அமைதி புறா, அவன் அருகில் வந்தவுடன் தள்ளி தள்ளி போனது. இவன் அதனால் பறக்க முடியாது என்பதை உணர்ந்து, அதன் அருகில் சென்று, அந்த நெகிழி பையினை கால் இடுக்குகளிலிருந்து எடுத்து விட்டான். இப்போது புறா தன் இறக்கைகளை அழகாய் விரித்து மகிழ்வாய் பறந்தது.
அது ஒரு முறை இவன் இருக்கும் திசை நோக்கி தன் சிறகுகளை மகிழ்வோடு இசைத்து அம்சமாய் பறந்தது. அந்த பறவையின் மகிழ்ச்சி இவனுக்கு மகிழ்ச்சியூட்டியது. இவன் உணர்ந்து கொண்டான், கொடுப்பதில் தான் மகிழ்ச்சி, எதைக் கொடுக்கிறோம் என்பதில் இல்லை, எதைக் கொடுத்தாலும் மகிழ்வாக கொடுக்க வேண்டும்.
அவனும் அப்படித்தான், அன்று அந்த அதிகாரி அவனுக்கு அந்த அரிய வாய்ப்பினைத் தராமல் போயிருந்தால், அவர் எப்படி பட்டவராயினும், அந்த காலத்தில் அவனுக்கு செய்த அந்த செயல்/உதவி, அவனை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவர் திசை நோக்கி நன்றி செலுத்தினான். அவரும் மேலே வந்துக் கொண்டிருந்தார்....
சூரியன் தன் அழகான அஸ்தமனத்தினை அரங்கேற்றி முடித்திருந்தது, அந்த அழகிய நிலா வான வீதியில் உலா வர ஆரம்பித்திருந்தது, இன்னொரு விடியலைத் தேடி....

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...