Sunday 11 September 2016

கர்ணன் - பாகம் 4

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மட்டுமே இந்த யுகத்தில் பிறந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு ஆன்மாவும் ஏதோ ஒரு ஆசையினைத் தன்னுள் சுமந்து அதற்கு ஒரு உருவத்தை தேடிக் கொள்கிறது. அந்த ஆசை ஒவ்வொரு உருவம் எடுக்கும் போது அத்தோடு நில்லாமல், புது புது ஆசைகள் பிறந்து அந்த உருவமெடுப்பு தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஆசை முடிவிற்கு வரும் போது அந்த ஆன்மா பெருமாளின் திவ்ய பாதுகையில் சரணடைகிறது. ஆனால் அதற்குள் அந்த ஆன்மா அற்ப ஆசையில் சிதறி காலப்போக்கில் பல்வேறு உருவமெடுத்து ஒவ்வொரு உருவத்திற்கும் பல்வேறு செயல்களைச் செய்து அதற்கேற்றார் போல் பாவங்களையும் சேர்த்து விடுகிறது.  

தனக்கு அளிக்கப்பட்ட அந்த அபூர்வசக்தியினைப் பரிசோதிக்க நினைத்த குந்தியின் காரணத்தால் உருவான கர்ணன் நீரோடையில் ஆதரவின்றி அனுப்பபடுகிறான். சஹஸ்ரகவசனாகப் பிறந்தவன் தன் 999 கவசங்களை இழந்து மீதமிருந்த ஒரு கவசத்துடன் கர்ணனாக அவதரித்தவன் தன்னுள்ளே அத்தனைச் சக்திகளையும் கொண்டுமிருந்து தேரோட்டி மகனாக வளர வேண்டியது தான் அவன் ஆன்மா எடுத்த ரூபத்தின் விளைவு. அந்த ஆன்மா ஓர் உயர்குலத்தில் உருவமெடுத்தும் அந்த ஆன்மாவின் முற்பிறவி ஆசை தொடர்ந்தமையால் இப்பிறப்பில் தேரோட்டி மகனாக வளர்ந்து துரியோதனனின் அரவணைப்பில் உய்க்க வேண்டியது ஆனது. 
கர்ணன் தான் தேரோட்டி மகன் என்று துயரம் கொள்ளாமல், அன்றைய தேதியில் அந்த குலத்திற்கு இடப்பட்டிருந்த தேர் பராமரிப்பு வேலையில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தன்னை பல்வேறு நிலையில் உயர்த்திக் கொள்கிறான். பிறப்பால் அரசமைந்தன் ஆனாலும் வளர்ப்பால் திருதாஷ்ட்ரன் அரண்மனையில் பணிபுரியும் அதிரதன் என்ற தேரோட்டியின் மகனாக வளர்க்கப்படுகிறான். ராதேயன் எனும் கர்ணன் அரசமைந்தர்கள் கற்கும் வில்வித்தை, மல்யுத்தம் போன்றவற்றை தானும் கற்று, தேரோட்டி என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டு அந்த அரசமைந்தர்களுக்கே ஒரு காலத்தில் சவால் விடும்படி உயர்கிறான்.

கர்ணன் தான் கொண்ட கொள்கையின் பிடிவாதத்தால் தான் இன்றளவும் பேசப்படுகிறான். அவன் பிறவியின் நோக்கமே பூமியில் சமநிலை நிறுவ தானாம். அந்த காலத்தில் சத்திரியர்களின் ஆளுமை நிறைந்திருந்தமையால் பிறர் கஷ்டமான வாழ்வை வாழ வேண்டிய கட்டாயம் இருந்ததாம். இந்த சூழ்நிலையால் தான் கர்ணன் தேரோட்டி மகனாக வளர்ந்தாலும் அரசர்களைப் போல் எல்லா துறையிலும் தன்னை தயார்படுத்திக்கொண்டு ஓர் அரசகுமாரனாகத் திகழ்ந்தானாம். கர்ணன் பிறப்பிலே அந்த சத்திரியர்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த பாரதப்போரில் துரியோதனின் சார்பாக போராடியவர்கள் மட்டும் உயிரிழக்கவில்லை, பாண்டவர்களின் சார்பாக போரிட்டவர்களும் உயிரிழந்தார்கள். இதனால் தான் உயர்ந்தவர்கள், தன்னை அழிக்க முடியாது மார் தட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் உயிரிழக்க வேண்டியதாகி விட்டது. பூமியின் பாரம் சமநிலைக்கு வந்ததாம்.எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் உயர்ந்தது தாழ்ந்ததுமில்லை என்று உணர்த்தவே படைக்கப்பட்ட ஓர் அற்புத உயிர் தான் கர்ணனின் பிறப்பு. வெற்றி தோல்வி என்பது என்று எதுவும் கிடையாது. ஓங்கி உயர்ந்த பற்றற்ற நிலை தான் புத்த நிலை, அந்த நிலையினை எவன் ஒருவன் அடைகிறானோ அவனே மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறான். நான் என்றும் தான் என்றும் தன்னுடையதைப் பிறரிடம் பகிரும் போதும் சரி, பிறரிடம் பகட்டாக எடுத்துக் காட்டும் போதும் சரி, “நான்”, தான் அழிவிற்கு வித்திடப்படுகிறது. எப்படிகைகேயி தான் பெற்ற வரத்தை மந்தரை எனும் தாதியிடம் சொன்னாளோ அன்றே ராம அவதாரத்தின் நோக்கம் செயல்படத்துவங்கியது, அதே போல் என்று குந்தி தனக்குப் பிறந்த கர்ணனை ஆற்றில் விட்டாளோ அன்றே கிருஷ்ண அவதாரம் நோக்கம் செயல்படத்துவங்கியது. குந்தியின் அவசரம், மந்திர துஷ்பிரயோகம், பிறகு குழந்தையினை மறைக்க துவங்கியது, ஆற்றில் நிராதராவாய் விட்டது, அதே அத்தோடு மறந்தது, பாண்டுவிடம் அதை மறத்தது என்று ஒவ்வொரு காரியங்களும் தொடர்ந்து இறுதியில் கர்ணனிடமே இரண்டு வரங்கள் கேட்ட வரை குந்தி கர்ணனுக்கு அந்த அரசகுமாரன் எனும் உயர்பதவியைக் கொடுக்கவில்லை. ”தான்” எனும் அகங்காரத்தில் சஹஸ்ரகவசனாக முற்பிறவியில் அலைந்த கர்ணன், மறுபிறவியில் தான் யார் மைந்தன் என்று அறியாமலே காலத்தினை நடத்த வேண்டிய கட்டாயம் ஆனது. எதுவும் நிரந்தரமில்லை, நிச்சயமுமில்லை. ஒன்றில் லயித்து அதில் தன்னை மறந்து இப்பூவுலகில் மக்கள் புரியும் காரியங்களை நினைத்து பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது. கர்ணன் யார் மகன் என தெரியாவிட்டாலும், தான் வளர்ந்த இடத்திலும் சரி, தன்னை மதித்து உயர்வு கொடுத்த துரியோதனனிடமும் சரி அவன் செய்கையில் எந்த பற்றுமில்லாமல் கடைசிவரை அந்த உன்னத நிலையினைக் கடைப்பிடித்தான். தன் கவசத்தை இந்திரன் கள்ளத்தனமாக கவர்ந்த போதும் சரி, தனக்கு கற்றுவித்த பரசுராமர் சாபமிட்ட போதும் சரி, தன் அன்னை குந்திதேவியே இரண்டு வரங்கள் பெற்ற போதும் சரி, தான் அழியப் போவது நிச்சயம் என்று தெரிந்தும் தான் கொண்ட கொள்கையில் தன் நண்பனுக்காகப் போராடினான். அதுவே பற்றற்ற நிலை. உயிர் மீதும் சரி, தான் பெற்றிருந்த அபூர்வசக்தியின் மீதும் சரி, தன் அன்னை என்று தெரிந்தும் அவரிடம் செல்லாமல், தன் சகோதரர்கள் என்று தெரிந்தும் பாணடவர்களின் மீது உக்கிர போர் புரிந்த போதும் சரி, கர்ணன் தான் வந்த நோக்கத்தைச் செவ்வனே செய்தான். 


ஒரு முறை கர்ணனா, தர்மரா யார் சிறந்தவர் தானத்தில் என்று சந்தேகம் வந்ததாம் அர்ஜூனனுக்கு. அவன் கிருஷ்ணரிடம் கேட்ட போது, அவர் சமயம் வரும் போது உனக்கு காட்டுகிறேன் என்று சொன்னாராம். ஒரு மழை காலம் வந்த போது, இருவரும் அந்தணர்கள் போல் வேடமிட்டு தருமரிடம் தாங்கள் வேள்வி வளர்க்கப்போகிறோம் அதற்கு சந்தன கட்டைகள் வேண்டுமென்றார்களாம், அதற்கு தருமர் இது கார் காலம், இப்போது முடியாது, வேறு என்ன வேண்டும் என்றாராம். அவர்கள் உடனே கர்ணனிடம் சென்று கேட்ட போது, தன் அரண்மனையில் இருந்த உத்திரங்களை அறுத்தும், வில்லையும் அம்பையும் உடைத்தும் அதன் மூலம் சந்தன கட்டைகளைக் கொடுத்தானாம். ஈதல் என்பது எண்ணத்தின் விளைவு. ஆதலால் கொடையில் சிறந்து வழங்கிய கர்ணனின் உயர்ந்த எண்ணத்தைப் போல் நாமும் நம் எண்ணங்களைச் செம்மையாக்குவோம். ஆக்குவோமாக.

--- தொடரும்

கர்ணன் - பாகம் 3

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.


எண்ணங்களே வலிமையானவை. எப்படி எண்ணுகிறோமோ அப்படியே நிறைவேறுகிறது. ஒருவன் தனது அற்புத எண்ணத்தால் வலிமை மிகுந்த அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டுமென்றாலும் அவனால் நிச்சயம் ஆக முடியும். அத்தகைய வல்லமை மிக்க எண்ணத்தினை துச்சமான சில காரியங்களில் லயித்து சுகித்து ஓர் அற்புத பிறவியினை இழத்தல் நீதியாகுமோ?


ஒவ்வொரு மனிதனும் ஒரு அற்புத ஆற்றலைத் தன்னிலையில் நிறுத்தி வைத்திருக்கிறான். சரியான சந்தர்ப்பம், சூழ்நிலை வரும் போது அதனைப் பயன்படுத்துவானேயானால் அவனை வெல்லுவது மிகக் கடினம். அத்தகைய ஆற்றலினை எதற்கு பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்தே அவனது செயலுக்குப் பயன் விளைகிறது. நல்வழியில் செலுத்தப்படும்போது அது அவனை மட்டுமேயன்றி பிறருக்கும் பயன் தரவல்லது. அதே தவறான முறையில் பயன்படுத்தப்படும் போது, அது அவனை மட்டுமன்றி அவனை சுற்றியிருக்கும் மாந்தர்களையும் அழிக்கவல்லது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் எப்படி நம் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமாகிறது.


முற்பிறவியில் சஹஸ்ர கவசனாகப் பிறந்த கர்ணன், சூரியனை நோக்கி கடும் தவமிருந்து சஹஸ்ர கவசத்தைப் பெற்றானாம். நர நாராயணர்கள் தோன்றி 999 கவசங்களை அழித்தனராம். எதற்குமே பயமின்றி துர் செயல்களைப் புரிந்து வந்த சஹஸ்ர கவசன் 999 கவசங்களை இழந்த பின் தன்னிலை மறந்து, பயந்து மறுபடியும் சூரியனிடம் தஞ்சம் அடைந்தானாம். அப்படி தஞ்சமடைந்த போது, நர நாராயணர்கள் சஹஸ்ரகவசனை ஒப்படைக்கும்படி சூரியனிடம் கேட்டார்களாம், அப்போது சூரியன் தன்னை நம்பி வந்தவர்களை எப்படி ஒப்படைப்பது என்று சொன்னாராம். அப்போது நாராயணர் சாபமிட்டாராம், நீ மானுடனாகப் பிறக்க கடவாய் என்று. அப்படி சாபமிட்டமையால் குந்தி தேவிக்கும் சூரியனுக்கும் மகனாகப் பிறந்தானாம் கர்ணன் அந்த பாக்கியிருந்த ஒரு கவச குண்டலத்துடன், இப்படிச் சொல்கிறது நாரதர் கதைகள்.


மந்திரங்களும் தந்திரங்களும் விளையாட்டாகப் பயன்படுத்தப்பட்டால் வரும் விளைவுகள் என்ன என்பதை எடுத்துக் காட்டாக வந்த பிறப்பாகிப் போனது தான் கர்ணனின் பிறப்பு. பிறப்பால் ராஜ வம்சத்தில் பிறந்தாலும், முற்பிறவியில் செய்த தீய செயல்களால் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்து, எல்லோர் மத்தியிலும் தாய் தந்தை அறியா பிள்ளை என இழி பெயர் பெற்று, அதனை உடைத்தெறிய தன்னையே வளர்த்துக் கொண்ட ஓர் அற்புத பிறவி தான் கர்ணன்.


எத்தனை பேர் இழிவாகப் பேசினாலும், தான் கொண்ட கொள்கையில் ஓர் இம்மி அளவும் பிசகாமலும், தான் கொண்ட இந்த பிறப்பை ஓர் அற்புத படைப்பாக ஆக்க வேண்டும் என்ற உன்னதம் தான் அவனை கொடை வள்ளலாக்கி உயர்வுற செய்தது.


ஒரு கை கொடுப்பதை மறு கை கூட அறியாவண்ணம் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று சொல்வார்களாம். ஆனால் இன்றோ தன்னிலை மறந்து, தன் நியதி மறந்து, தான் செய்ததை விலை பேசும் மாந்தர்கள் கூட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து மனம் வருந்துகிறது. கொடை குணம் மலிந்து போட்டி, பொறாமை மிகுந்து ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள பிறரை வஞ்சிக்கும் குணம் தான் வளர்ந்து கொண்டே போகிறது.


கண்ணன் கீதையில் சொன்னது போல், என்ன கொண்டு வந்தாய், எதை நீ இழப்பதற்கு. இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எதுவுமே உன்னுடையதில்லை. இன்று இருப்பது போல் தோன்றும் ஒவ்வொன்றும் நாளை இருக்கப்போவதுமில்லை.


கடமையைச் செய், பலனை எதிர்பாராதே. அந்த அற்புத வரிகளின் நிதர்சனமான நாயகன் தான் கர்ணன். அவன் துரியோதனின் அன்பில் வயப்பட்டு, அவன் தன்னை அங்க தேசத்தின் அரியாசனத்தில் அமர்த்திய போதும் சரி, அவனுக்காக போரில் உயிர் துறந்த போதும் சரி, கர்ணன் தன் கடமையை விட்டு நூலளவும் விலகவில்லை, அதற்காக தன்னை அவன் வருத்திக் கொண்டதுமில்லை. கர்ணன் தன் வாழ்வை ஒரு வேள்வியாக்கி, பரந்தாமனே தன் விஸ்வரூபம் காட்டிய ஓர் அற்புத பிறவி கர்ணன்.


--- தொடரும். 

கர்ணன் - பாகம் 2


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.

ஒன்றைச் சுமந்து கொண்டு ஒன்றைத் தாங்கி வருவதே ஒவ்வொரு பிறவியும். ஒவ்வொருவரின் ஆன்மாவும் அலை போல் பாற்கடலில் அலைந்து கொண்டிருக்குமாம். அப்போது ஆன்மா முழுவதும் திருபாற்கடல் நாயகன் திருமாலின் அருட்பார்வையில் லயித்து சுகித்து இருக்குமாம்.

சில நேரங்களில் சில ஆன்மாக்கள் அந்த சுகித்த நிலையினைத் துறந்து அற்ப ஆசைக்கு மயங்கி ஓர் உருவம் எடுத்து உலகத்தில் ஜனிக்கும் என்று வேதவிளக்கம் கூறுகிறது.

அப்படிப் பட்ட அந்த ஆன்மா மறுபடியும் திருபாற்கடலில் வந்து கலந்து சுகித்திருக்க பல ஜென்மங்கள் ஆகும். அப்படி எடுக்கப்பட்ட ஓர் அற்புத பிறவி தான் நாமெல்லாம். ஆனால் இதை புரியாமல், தாங்கள் உயர்ந்தவர் என்றும் பிறரைத் தாழ்ந்தவர் என்றும் அற்பமான முறையில் சித்தரித்து இவர்கள் புரிந்திடும் திருவிளையாடல்களைப் பார்க்கும் போது நிச்சயம் சிரிக்கத் தான் தோன்றுகிறது.

எப்படி பிறந்தாலும் இப்பிறவியில் மனிதனாகத் தோன்றியதன் மகத்துவம் உணர்ந்து, ஆறறிவு ஜீவன் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட மறுப்பது கேலிக்கூத்தாக்குகிறது அவர்கள் பிறவியின் பயன்கள்.

அப்படித் தான் கர்ணன் தன் முற்பிறவியில் ஓர் சஹஸ்ர கவசம் கொண்ட ஓர் அரக்கனாகப் பிறந்தானாம். அவனை அழிக்க வேண்டுமென்றால் அவன் அணிந்துள்ள 1000 சட்டைப் போன்ற கவசங்களை அழித்து அதன் பிறகு அவனை அழிக்க வேண்டுமாம். அப்படி வரம் பெற்று அவன் செய்த அட்டகாசம் நிறைய. எல்லா தேவர்களும் நாராயணனிடம் முறையிட அவர் நரனாகவும் நாராயணராகவும் அவதரித்து, நரர்கள் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தனர், அந்த தவத்தின் மகிமையால் நாராயணர் அரக்கனோடு போரிட்டு அவன் ஒரு கவசத்தை அழித்தாராம். இப்படியாக 999 கவசங்கள் அழித்து முடிக்கும் போது அந்த யுகம் முடிந்து பிரளயம் வந்ததாம், அடுத்து வந்த யுகத்தில் கர்ணன் அந்த மீதியிருந்த ஒரு கவசத்தோடு அவதரித்தானாம். அத்தகைய கர்ணனை அழிக்கவே நர ரூபத்தில் அர்ஜூனனாகவும், கிருஷ்ணன் ரூபத்தில் நாராயணனும் அவதரித்தாராம். 12 ஆண்டுகள் வனவாசம் தான் அந்த 12 ஆண்டுகள் கடும் தவமாம்.

இப்படி சொல்கிறது நாரதர் கதைகள். என்ன செய்தாயோ அது இங்கேயே விட்டுச் சென்று அதை வேறொரு ரூபத்தில் நீயே எடுத்துக் கொள்ளப் போகிறாய். அப்படியிருக்கும் போது ஏன் மனிதா! உனக்குள் இத்தனை பேதங்கள், தான் என்ற திமிரும், தன்னை மிஞ்சி யாருமில்லை என்ற எகத்தாளம்.

உன்னை மிஞ்சி யாருமில்லை என்று எண்ணாதே. உனக்கு முன் தோன்றிய எத்தனையோ தலைமுறை இப்போது இல்லை. அவர்கள் ராஜா ஆகவும், மந்திரியாகவும், வீரராகாவும், மதியுகி மந்திரியாகவும் இருந்திருக்கலாம், ஆனால் இன்று நீ மனிதன் தான். அதை உணர்ந்து கொள். உன் பிறப்பும் அடுத்தவரின் பிறப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசமில்லை. அவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளப்பட்ட ரூபம் தான் இந்த ரூபம்.

ஒன்றிலிருந்து தான் மற்றொன்று தோன்றுகிறது. அதை உணர்ந்து செயல்படுங்கள். நீ எதை செய்கிறாயோ அதன் பயனைத் தான் அனுபவிக்கிறாய். நீ சுகித்திருக்க உன் உழைப்பைக் கொடுத்தாயானால் மட்டுமே நீ சுகித்திருப்பாய், அதை விடுத்து நான் உழைக்கும் தருணத்தில் சுற்றித் திரிவேன் ஆனால் அறுவடை நேரத்தில் மட்டும் வந்து நெல்கதிர்களை அள்ளிச் செல்வேன் என்றால் முடியுமா? யார் உழுவது, யார் விதைப்பது, யார் பராமரிப்பது, யார் நீர் பாய்ச்சுவது, யார் உரமிடுவது, யார் கதிர் அறுப்பது. இத்தனையும் செய்யாமல் அரிசி உணவருந்த முடியுமா?, சிந்தியுங்கள்.

நாம் நெல் விதைத்தால் வேறு முளைக்கப்போவதில்லை. அது போலத் தான் என்ன எண்ணத்தை விதைக்கிறோமோ அதை மட்டுமே அறுக்கப் போகிறோம். முற்பிறவியில் அசுரனாக அவதரித்த கர்ணன், கொடை வள்ளலாகத் திகழ்ந்த போதிலும், அவன் அந்த பிறவியில் அழியாமல் பிரளயத்தின் மகிமையால் அந்த பிறவியினை மறுபிறப்பில் தொடர்கிறான், அவனுடைய எண்ணங்களும் சேர்க்கையின் பயனால் கடுமையாக்கப்படுகிறது. பாண்டவர்களின் மூத்தவனாகப் பிறந்து அவனே அவர்களை எதிர்க்கும் வண்ணம் இந்த பிறவி அமைகிறது.

உங்கள் முற்பிறப்பை அறிய வேண்டுமானால், இந்த பிறப்பின் உங்கள் எண்ணங்களை அலசுங்கள், அதுவே உங்களைப் பற்றிய உண்மையினைச் சொல்லிவிடும். உங்களை உள்நோக்கிப் பாருங்கள், நீங்கள் எடுத்து வந்த இந்த பிறப்பு புரியும். எதற்காகத் தோன்றினோம் என்று புரியும். மனம் சஞ்சலமிடும், ஒரு நிலை படுத்த முடியாமால் தடுமாறும். நாம் குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சியில் தோன்றியவர்கள் என்பது ஒவ்வொரு முறையும் உணர்த்தப்படும். தாவி திரியும் மனதை ஒரு நிலைப் படுத்துங்கள். உள் நோக்கிப் பாருங்கள், நீங்கள் தெளிவாகத் தெரிவீர்கள். அமைதியாக உள் நோக்கும் போது அலை இருக்காது, ஆர்பரிப்பு இருக்காது. உண்மை புரியும். வந்த நோக்கம் புரியும். நோக்குவோம்......

---- தொடரும்

கர்ணன்

கர்ணன்

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தானே கர்ணன் அவனே இந்த பாகத்தின் நாயகன்.

கூட்டமாய் வாழ்ந்து வந்தது ஒரு கூட்டம் அந்த பிரதேசத்தில். அந்த பிரதேசத்தில் நீர் மூன்று பங்காகவும், நிலம் ஒரு பங்காகவும் இருந்தது. அதன் பெயர் பூமி என்றும், அந்த யுகத்தின் பெயர் கலியுகம் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

அந்த கலியுகத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த ஓர் கதையான இதிகாசம் தான் மகாபாரதம். வியாசரால் எழுதப்பட்ட ஓர் மகா காவியம். பல நெறிமுறைகளைச் சொல்லி தந்த இந்த இதிகாசம், காலத்தின் போக்கில் சில நெறிமுறைகள் இன்றைய முரண் பட்டிருந்தாலும், வலு குறையா ஒரு உன்னதம் என்று தான் சொல்ல முடியும்.

அந்த இதிகாசத்தில் ஒரு அருமையான கதாபாத்திரம் தான் கர்ணன். நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் நடிப்பாற்றலால் பட்டித் தொட்டியெல்லாம் அந்த கதாபாத்திரம் சேர்ந்தடைய செய்தார் என்பது வரலாறு. நம் கதையின் நாயகனின் வாழ்க்கை வரலாறைப் பதிவு செய்ய இல்லை இந்த பதிவு, அதை மையப்படுத்தி இன்றைய சூழ்நிலையின் மனிதர்களும் மனிதமும் என்ற போக்கில் நடைப் பயில போகிறது இந்த பதிவு.

யாரும் யாரையும் நம்பி வருவதில்லை. யாருக்காகவும் இந்த உலகம் நிற்பதில்லை. தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்தி வாழ்ந்திட நினைத்த யாரும் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. மறுபடியும், மறுபடியும் தனக்காக காத்திருக்கும் இறப்பை மறந்து, தான் மட்டுமே வாழப் போவதாய் எண்ணும் சிலர் செய்யும் விஷமமான பரீட்சைகள் அவர்களை விழுங்குமேயல்லாது மற்றாரை வீழ்த்த போவதில்லை.

செம்மைப் படுத்த வேண்டிய கல்வி இங்கு வியாபாரமாகி போய்விட்டது. கல்வி சிலருக்கு காலத்தின் போக்கில் வாய்க்கப் பெற்று விட்டது. அவர்களின் விதிபடி அது நடந்தேறிவிட்டது, அதற்காக உலகம் அந்த ஒருவரை சார்ந்து இருந்துவிட வில்லை. தான் என்றும் தனக்கு என்றும் இருந்தோர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவன் பெயரில் நடத்தப்படும் இந்த நாடகம், ஒத்திகையன்றி அரங்கேற்றப்படுகிறது, அதுவும் தான் என்ற மமதையில், அகங்காரத்தில், தன்னிலை மறந்து, தான் தோன்றித்தனமாய் விளையாட்டு காட்டப்படுகிறது.

தகுதியற்றவர்கள் முன்னிலைப்படுத்தும் போது இந்த சூழ்நிலை ஏற்படுவது என்பது உலக உண்மையே. இது தெரியாமல் வஞ்சத்தில் வீழ்ந்து விட்டானே இந்த மனிதன். மனிதா, மனிதம் காண மிருகத்தில் தேடாதே, இங்கே பசு தோல் போர்த்திய புலிகள் நிறைய.

பாம்பு விஷம் தான் கக்கும் என்று தெரிந்தும், அதனோடு உறவு கொண்டால், உயிர் போகுமேயல்லாது உறவு வளருமோ. உலக நியதியும் மறந்து, எந்த வரைமுறைக்கும் கட்டுபடாமல் வாழ்தல் சரியாகுமோ.

அர்ச்சுனனுக்கு இணையாகப் போற்றப்பெற்ற கர்ணன் சேராத இடம் தன்னில் சேர்ந்து, அவர்களின் போக்கில் வாழ்ந்து, அவர்கள் செய்வது தான் நியாயம் என்று நினைத்து, உலகத்தின் நியதி மறந்து, அந்த செஞ்சோற்று கடன் தீர்க்க பலரின் வஞ்சத்தின் வீழ்ந்தானே. போரில் வெல்ல முடியா அவனை, அவன் உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்கள் யாசிக்கப் பெற்று விட, அவன் குருவினாலே சபிக்கப் பெற்ற பாவியானதால் (சபித்தால் தான் குருவோ) சரியான நேரத்தில் அவனுக்கு பயிற்றுவிக்கப் பட்ட வித்தை மறந்தான், தாய் தந்தை யாரைன்று தெரியாமல் வளர்ந்து, ஓர் இக்கட்டான போர் சூழ்நிலையில் தாய் அறியப்பெற்று அவளுக்கு ஓர் வரம் கொடுத்து, அந்த வரத்தால் போரில் நிலை குலைந்தான், ஓர் அந்தணனின் சாபத்தால் தேரோட்டி சரியான நேரத்தில் கழண்று கொள்ள, எல்லாம் அறிந்த கண்ணன் கர்ணனின் தர்மத்தை யாசிக்க, நிராயுதபாணியான கர்ணனை வில்லாளன் வீழ்த்தினான். இது கதை.

--- தொடரும்

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...