Friday 13 July 2012


கவிதைகள் - ஏணி

ஏணி  - 1

ஏற்றி விடும் பொழுதெல்லாம்
ஏற்றமே நோக்கமென்று
ஏறி போனாலும் திரும்பி பார்
ஏறும் பொழுதெல்லாம் உன் அழுத்தத்தில்
ஏறிய படிகள் உனை மட்டும் சுமக்கவில்லை
ஏறும் போதெல்லாம் உன் சுமைகளையும் தான்...

திரும்பி பார்
ஏணி இன்னும் காத்திருக்கிறது
எட்டி உதைத்தாலும் ஏற்றி விட...

ஏணி - 2

ஒவ்வொரு முறை கதை சொல்கிறது
ஒவ்வொருவரின் வாழ்க்கை சொல்கிறது
ஒரு நாளும் அதன் கதை
ஒருவருக்கும் தெரிவதில்லை
ஒருவருக்கும் புரிவதில்லை
அதற்கும் படிகள் இருக்குமென்று
அதன் படிகளும் வலிக்குமென்று...

ஏணி - 3

எத்தனை முறை ஏறினாலும்
எத்தனை முறை இறங்கினாலும்
ஏற்றத்திற்கு உதவாமல் இருப்பதில்லை
ஏற்றத்தையும் இறக்கத்தையும்
என்றுமே பொருட்டாய் கொள்வதில்லை
ஏணியும் தோணியும் ஒன்று தான்
நம்மை கரை சேர்ப்பதால்... 

கவிதைகள் - பணம்

பணம் - 1

பிணம் தின்னும் கழுகுகள்
பின்னோக்கி நடந்தன
பிச்சைக்காரன் தெருவோரத்தில்
பிணமாய்...

பணம் - 2

செல்லா காசுகளை முடித்து வைத்து
செல்லும் காசுகளை தொலைத்திருந்தாள்
செல்லாத்தாள் பாவம்
செல்லாமல் போய்விட்டாள் - ஆம்
சொல்லாமல் போய்விட்டாள்
செனக்கூட்டத்திற்கு சுமையாகி போனாளே....

பணம் - 3

உணர்வுகளை தொலைத்து
உறவுகளை காவு கொண்டு
ஊருக்கு விலை போகிறது
உயிர்கள் இங்கு
உயிரற்ற பணத்தில் மோகம் கொண்டு...

பணம் - 4

செருக்கேறி மெருக்கேறி
உடலேறி உருமாறி
உயிரற்ற ஜடங்கள்
அன்பை தொலைத்து
அச்சேறிய தாளுக்கு
அடித்துக் கொள்ளும் அலங்கோலம்
அவணியின் நிகழ்காலம்...

கவிதைகள் - குழந்தை

குழந்தை - 1

உலகம் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு குழந்தையின் தோற்றத்தில்.

குழந்தை - 2

மழலைச் சொல்லில்
மயக்கும் மொழியில்
மங்காமல் ஒலிக்கிறது
மங்களச் சங்கு
ஒவ்வொரு இல்லத்திலும்....




கவிதைகள் - கோடை மழை

கோடை மழை - 1

மேகம் அழுது தீர்த்துக் கொள்கிறது
வெப்பத்தின் கொடுமையினை...

கோடை மழை - 2

சில்லிடுகிறது மனம்
சிறகுகள் வட்டமிட துடிக்கிறது
சில நிமிட மழைத்துளிகளில்...

கோடை மழை - 3

விழுந்த இலைகள்
விழுதாய் துளிர்கிறது
கோடை மழையில்...

கவிதைகள் - வேசி

வேசி - 1

கட்டி அணைக்கிறது உறவுகளை
கட்டில் தினம் ஒருவராய்விபச்சார வீட்டில்....

வேசி - 2

பூக்காமல்
தினம் பறிக்கப்படும்
பூ....

வேசி - 3

ஒரு அவசர நாடகம்
அரங்கேறுகிறது தினம்
ஒரு நாயகன்....

வேசி - 4

உடல் மாற்றம்
உடையோடு கலைகிறது
உறவுகள் தினம் தினம்...

வேசி - 5

சிற்பம் சிதைந்து
சிலை விலையாகிறது
செதுக்கப்படாமலயே....

வேசி - 6

ஆசைகள் ஆராயப்படுகின்றன
ஆதியோடு அந்தமாய்
கட்டிலில்...

வேசி - 7

முற்றும் துறந்தும்
முடியவில்லை இரவுகள்...







ஹைக்கூ முயற்சி


ஹைக்கூ - 1


இடிந்து கிடந்தது கட்டிடம்
இழக்கவில்லை சிரிப்பு
புத்தரின் சிலையில்...

ஹைக்கூ - 2

மூடப்பட்ட கடையில்
மூடவில்லை கதகதப்பு
தெரு நாய்களுக்கு...

ஹைக்கூ - 3

முடிந்தது வியாபாரம்
தொடர்ந்தது நாய்களுக்கு
மூடப்பட்ட கடையோரத்தில்...

Monday 6 February 2012

வாழிய வாழியவே...

வாழும் மலரே!
வாழிய நீ பல்லாண்டு
வாழ்த்திப் பாடுகிறேன் நானும்...

வாழும் கலையோடு
வளமும் நலமும் தன்னோடு
வளர்வாய் நீயும் மலராவே!!!

அரும்பே, அறிவே!
அறியா கலை பல தன்னாலே
அருந்தி பருகும் பதமாவே
அருள்வாய் உன் வாய்மொழியாலே
அனுதினமும் பயின்று
அடுத்து அடுத்து பெறுவாய் ஏற்றமுமே...

அழியா கல்வி பயின்று
அதில் முத்திரையும் பதித்து
அற்புதமாய் வாழிய வாழியவே!!!

Friday 3 February 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 6


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் ஆறாம் பாகத்தை தொடர்வோமா

வன்பற் றறுக்கு மருந்தென்று மாயவன் தானுரைத்த
இன்பக் கடலமு தாமென நின்றவிக் கீதைதன்னை
அன்பர்க் குரைப்பவர் கேட்பவர் ஆதரித் தோதுமவர்
துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துலங்குவரே - கீதார்த்த ஸங்க்ரகம்
(ஆளவந்தார் மூலத்தை வேதாந்த தேசிகர் தமிழில் பாடியது)

இதுவரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதையின் நோக்கம் மற்றும் எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள் எழுதியுள்ள உரைகளிலிருந்து முன்னுரையாக சிலவற்றைப் பார்த்தோம். இப்போது நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் அத்தியாயங்களில் நுழைந்து அதன் மூலம் மாறாமல் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் பாதையில் நாம் நம் எளிய உரைக்குப் போவோம்.

அந்த பகவான் கிருஷ்ணனை வணங்கி அவன் அருள் வேண்டி, அவன் உரைத்த இந்த அருட்பெரும் கொடையினை உரையாக உரைக்க முயல்வது என்பது எனக்கு நானே செய்து கொண்ட ஒரு ஆத்ம சோதனையாகும். அந்த பகவான் கிருஷ்ணன் கருணையன்றி இந்த செயல் செய்திட முடியாது, எல்லாம் அவன் செயல். என்னை தூண்டியதும் அவனே, என்னில் இருந்து எழுத்தாய் இயக்குவதும் அவனே. அதனால் இந்த பதிவில் இருக்கும் அல்லது ஏற்கனவே உள்ள பதிவில் ஏதேனும் பிழையிருப்பின் அல்லது குறையிருப்பின் என்னை குறை கூறுங்கள், நிறையிருப்பின் அந்த புகழ் அனைத்தும் பகவான் அவனுக்கே சொந்தம். தமிழ் எழுத்தின் ஒவ்வொரு வடிவிலும் அவனே இருந்து அவனே எழுத்தாகி, எண்ணமாகி உருமாறுவதால் அந்த கிருஷ்ணனை வேண்டி இந்த உரையினைத் தொடர்கிறேன்...

நாம் அனைவருக்கே தெரிந்த கதை தான் மகாபாரதம். வீண் ஆசை, அகம்பாவம், பகட்டு, பிறர் மனையாளைக் கேலி செய்தல், கௌரவம், அகங்காரம், தான் எனும் வறட்டு பிடிவாதம், தன்னை மிஞ்சி உலகில் எவருமில்லை எனும் எண்ணம், நல்லாரை இகழ்தல், இழித்து பேசுதல் போன்ற பல துர்செயல்களில் ஈடுபட்ட ஒரு குலத்தாரின் நோக்கத்தால் ஏற்பட்ட போரே குருக்ஷேத்திரப் போர், அந்த குருஷேத்திரப் போரில் அர்ஜூனன் உறவினர்கள், குருமார்கள், சுற்றத்தார்கள் பார்த்து போர் புரிய ஸ்தம்பிக்கும் போது நீதியின் உபதேசமாகவும், ஞான உபதேசமாகவும், அறநெறிகள் உபதேசமாகவும், எல்லாம் வல்ல இறையின் மகிமையினை உரைக்கும் உபதேசமாக அந்த பகவானே எடுத்துரைக்கும் உபதேசம் தான் ஸ்ரீமத் பகவத்கீதை. இந்த ஸ்ரீமத்பகவத்கீதை மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளது, அதில் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம் எனும் பெயர் பெற்றது.

நம் வேதாந்த வித்தகர் ஆச்சாரிய அண்ணா அவர்களின் உரையிலிருந்து முதல் அத்தியாயத்தின் கீதை வெண்பா சொல்லி நம் விளக்கம் போனால் எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

குருநிலத்திலே விசயன் கூடியதன் பாட்டன்
வருகுரவர் மாமன் முதல் மற்றும் - அறியதமர்
யாவரையுங் கண்டிவரை எவ்வாறு கொல்வனென
மேவு துயர் கூறுமிது மிக்கு - கீதை வெண்பா

அதாவது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கு இடையே போர் புரிவது என்று முடிவாகி விட்டது. இருவரும் ஒப்புக்கொண்ட அந்த குருக்ஷேத்திரத்தில் தங்கள் படைகளை நிறுத்தி அங்கு போர் புரியத் தொடங்குவது என்று உறுதிக் கொண்டு வந்தனர். பகவான் கண்ணன் தான் போர் புரிய மாட்டேன் என்று சொல்லி, இருவரில் ஒருவருக்கு உதவுதாகவும், மற்றொருவருக்கு தன் படையினைத் தருவதாக ஒப்புக் கொண்டார். துரியோதணன் அழியும் வீரர்களை பெற்றான், அர்ஜூனனோ அந்த பரம்பொருளை சாரதியாகப் பெற்றான். முதல் வெற்றி பாண்டவர்களுக்கு அங்கேயேத் தொடங்கியது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தில் உள்ள 47 ஸ்லோகங்களில் வேதவியாசரின் அருளால் மதி மந்திரி சஞ்சயன் ஞானக் கண் பெற்று, அருட்பார்வையின் மூலம் களத்தில் நடைபெறும் விஷயங்களை தன் மன்னன் திருதுராஷ்ட்ரனுக்குச் சொல்லும் விதத்தில் தொடங்குகிறது ஸ்ரீமத்பகவத் கீதை. களத்தில் என்ன நடக்கிறது கண்பார்வை இழந்த மன்னன் கேட்க, பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் படையினை எப்படி நிறுத்தியிருக்கிறார்கள் என்று அழகாக விவரித்து, பாண்டவர்கள் பக்கம் யார் யார் இருக்கிறார்கள், கௌரவர்கள் பக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சொல்லி, மேலும் அங்கு துரியோதனன் தன் படைவீரர்களுக்கும், துரோனர், பீஷ்மர் போன்றவர்களுக்கும் இடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகள் சொல்லுகிறார். அங்கு துரியோதனன் எப்படி பீஷ்மர், துரோனர் அவர்களிடம் நடந்து கொள்கிறான், தன் படை பலத்தின் பெருமையினைக் கூறுகிறான் என்றும் சொல்கிறார். அப்போது பீஷ்மர் சங்கு எழுப்பி போரினைத் தொடக்கி வைக்க அப்போது பிற கௌரவர்களின் சங்கு நாதம் எவ்வாறு இருக்கிறது என்றும் சொல்கிறார். பாண்டவர்களில் ஒவ்வொருவரின் சங்கு பற்றி அழகாகச் சொல்லி அதன் மகத்துவத்துடன் அவர்கள் எழுப்பிய ஓசை எப்படி கௌரவர்களின் இதயத்தில் ஒரு பயத்தினை ஏற்படுத்தியது என்றும் கூறுகிறார். அர்ஜூனன் தான் போர் புரியப் போகும் கௌரவர்களின் வரிசையில் இருக்கும் தலைவர்கள் பார்க்க விரும்பி அந்த கண்ணனை போர் களத்தின் நடுப்பகுதிக்கு தேரினை செலுத்த சொல்லி, அங்கு பீஷ்மர், துரோனர், துரியோதனன், கர்ணன், கௌரவப் படைகள் பார்த்து இவர்கள் எல்லாம் உறவினர்கள் அல்லவா, ஆசிரியர்கள் அல்லவா.. இவர்களுடன் நான் போர் புரிய மாட்டேன். இவர்களைக் கொன்று அந்த தேசம் தனக்கு தேவையில்லை என்றும், இவர்களின் அழிவால் ஏற்படும் எந்த நல்லதும் தனக்குத் தேவையில்லை என்றும், ஒரு குலத்தினை அழிப்பது பெரும் பாவம் என்றும் அதனால் எத்தகைய இழிவு, இழிப்பெயர் கிடைக்கும் என்றும் சொல்லி, தன் வில்லினை கீழே போட்டு விட்டு, அந்த தேரில் அமர்ந்து விடுவதாக முடிகிறது இந்த முதல் அத்தியாயம்.


நாம் ஒவ்வொருவருமே போர் புரிகிறோம் தினம் தினம். உடல் தான் போர்களம். எண்ணங்கள் தான் போர் புரிகிறது. மனம் திசை மாறி தடுமாறுகிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் அந்த மனம் இங்கே அங்கே என அலை பாய்ந்து ஒரு நிலைக் கொள்ளாமல் தன் நிலை மறந்து ஒரு இருப்புக் கொள்ளாது போராடுகிறது. இந்த நிலையில் வெளியேயும் உள்ளேயேயும் ஏற்படும் சூழ்நிலைப் பொறுத்து மனநிலை இன்பமாகவும் துன்பமாகவும் உருப்பெறுகிறது. நிரந்தரமற்ற இந்த எண்ணத்தின் ஆசையில் மனம் ஒரு நிலை படாமல் இன்பத்தின் மீது மோகம் கொண்டு, துன்பச்செயல்களை தெரிந்தும் தெரியாதது போல் நடித்தும் செய்து இன்புறுகிறது. ஒருவன் மனக்கட்டுப்பாட்டில் தான் அவன் தன்மை புரிய முடியும்.. எவன் ஒருவன் ஆசையினை வெறுக்கிறானோ அவனே பற்றற்று வாழ முடியும். அந்த பற்றற்ற நிலை அவனைப் பக்குவப்படுத்தும்.

ஒருவன் எண்ணற்ற வித்தைகள் கற்றுள்ளான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கற்ற வித்தைகள் இந்த உலகில் எவனையும் வீழ்த்தும் அளவிற்கு வல்லமை படைத்தது என்று வைத்துக் கொள்வோம். அவன் தான் கற்ற வித்தைகள் மூலம் இந்த உலகில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருந்தாலே நலம். அப்படியில்லாமல் தான் கற்ற வித்தையின் மீது அபார நம்பிக்கை கொண்டு, தீயச் செயல்கள் செய்யத் தொடங்குவானாயின் அவன் தன் முடிவு காலத்தினைத் தொடக்கி வைக்கிறான் என்று அர்த்தம். எப்படி, ஒரு வேளை பெண்ணாசைக் கொண்டு அவன் பிற மனையாளை கவர நினைத்தாலோ அல்லது மோகத்தில் தன் இல்லாளைத் தவிர பிற பெண்களை காம குரோதத்தில் நோக்கினான் என்றால் அந்த நிமிடமே அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது. அந்த பெண் பித்து அவனை அழிவு நோக்கி இழுத்துச் செல்லும். அவனை தகாத செயல்களுக்கு தூண்டும். அவனை ஆசையெனும் பேய் பிடித்துக் கொண்டு அவன் செயல்களில் வன்மம், கோபம், பிடிவாதம், பித்தலாட்டம் எனும் துர்செயல்கள், துர் எண்ணங்கள் பிடித்துக் கொண்டு அவனை அழிவு பாதைக்கு வெகுவிரைவில் இழுத்துச் சென்றுவிடும். இது தான் துரியோதனின் கதை. சகுனியின் பேச்சில் மயங்கி, அவன் வித்தையின் மேல் நம்பிக்கை கொண்டு, அந்த வித்தையின் மூலம் பாண்டவர்கள் சூதுக்கு அழைத்து அதில் அவர்களினை வீழ்த்தி, அடிமைப்படுத்தி, அவர்களின் மனைவியான துரௌபதியினை அவமானப்படுத்தி தன் சாவிற்கு அவன் வழித் தேடி கொண்டான். ஒருவன் தான் அழிவு பாதையில் செல்லும் போது தான் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லது போல் தோன்றும், தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற மமதை வரும். தான் என்ற அகங்காரம் வரும், அத்தனையும் துரியோதனனிடம் வந்தது. அதே நேரத்தில் எதிரியின் பலம் தெரிந்து இருக்கும் பட்சத்தில் உள்ளுக்குள்ளே அந்த மனம் புரியாமல் வேதனைப்படும், உண்மையில் புழுங்கும், அவன் மனமே அவனை நச்சரித்து கொன்றுவிடும். அந்த நேரத்தில் அவனை அறியாமல் அவன் உளர ஆரம்பித்துவிடுவான். இதுவும் போர்களத்தில் நடந்தது, துரியோதனன் பீஷ்மரைப் புகழ் துரோனரை இறக்கிச் சொன்னான், துரோனரைப் புகழ் பீஷ்மரை இறக்கிச் சொன்னான், தான் என்ற மமதையிலும் தன் படையின் அளவினை ஒப்பிட்டு தன் அகங்காரத்தினை வெளிப்படுத்தினான்.

அதே நேரத்தில் அனைத்தும் கற்ற வித்தகன் அர்ஜூனன், எந்த நேரத்திலும் தன் மனமாயை வெல்லக் கூடிய சக்தியினைப் பெற்று இருந்த அர்ஜூனன் போர்களத்தின் நடுவில் தேர் வந்தவுடன் எதிரில் இருக்கும் உற்றார்களைப் பார்த்து போர் புரியமாட்டேன் என்று சொன்னான். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

ஒரு வீட்டில் இரு சகோதரர்கள். அவர்களின் பெற்றோர் நல்ல சம்பாதித்து பெரும் சொத்தினைச் சேர்த்து வைத்தார்கள். ஒருவனுக்கு சொத்தின் மீது அளவற்ற பாசம், இளையவனுக்கு சகோதரன் மீது அளவற்ற பாசம். இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் மாண்டு விட்டனர். இப்போது இவர்கள் இருவர் மட்டுமே, சொத்தின் மீது ஆசையுள்ளவன் தன் சகோதரனின் சொத்தையும் சேர்த்து அபகரிக்க நினைக்கிறான். அதற்கு தன்னால் முடிந்த மட்டும் தகாத செயல்கள் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் செய்யும் செயல்கள் சகோதரனை நிலைக் குலைய வைக்கிறது. அந்த சூழ்நிலையிலும் அவன் தன் சகோதரனுக்காகத் தான் பரிந்து பேசுகிறான். இவர்களின் செயல் பார்த்த மூன்றாம் ஒருவன் இந்த இருவரின் சச்சரவில் தான் ஏதாவது அநுபவிக்க முடியுமா என்று பார்க்கிறான். அவன் சொத்து ஆசையுடயவனை வசப்படுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்கிறான். நீதிபதியின் முன் வழக்கு வருகிறது. எதிர்தரப்பில் தன் சகோதரன் தகாத செயல்கள் செய்த போதும் தன் நிலையினை நிலைநாட்டவும், நீதியினை நிலை நாட்டவும் இளையவன் வாதாட வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் நீதியினை நிலை நாட்டாமல் வழக்கினையும் தொடராமல் இளையவன் சோர்ந்து உட்காருவதால் என்ன லாபம் சொல்லுங்கள். நீதியினை நிலைநாட்ட, தர்மத்தினை முன் நிறுத்த நிச்சயம் நாம் ஒவ்வொருவருமே முனைய வேண்டும் அல்லவா. அந்த சூழ்நிலையில் எதிர்தரப்பில் என் அண்ணன் இருக்கிறான், என் உறவினர்கள் இருக்கிறார்கள் அதனால் நான் வழக்கில் நியாயத்தினை நிலை நாட்ட வாதாடமாட்டேன் என்று சொன்னால் என்னாகும். தீர்ப்பு ஒரு சார அமைந்து விடாதா, அது அநியாயத்திற்கு வித்திட்டு விடாதா. தர்மம் தோற்று விடாதா. சொல்லுங்கள். நீதிபதி என்ன தான் சாராமல் இருந்தாலும் வாதத்தின் அடிப்படையில் தானே நீதியினை நிலை நாட்ட முடியும். உண்மையின் அடிப்படையில் தானே நீதியினை வழங்க முடியும். இருபக்கம் எடுத்துரைக்கும் வாதம் மற்றும் அவர்கள் பக்கம் அதற்கு வழங்கும் ஆதாரம் போன்றவற்றின் மூலம் தானே நீதிபதி தன் தீர்ப்பினைச் சொல்ல முடியும். எதிர் தரப்பில் இருப்பவன் அண்ணன் ஆகையால் நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் நியாயம் வெல்ல வேண்டும் என்று சொன்னால் சரியாக வருமா. சிந்தியுங்கள்.

இது தான் அர்ஜூனனின் மன நிலை, அழியும் உடலின் மீது பற்றுக் கொண்டு, அந்த உடல் தாங்கி நிற்கும் உறவுகளின், ஆச்சார்யர்களின் மீது பற்றுக் கொண்டு, அந்த நிமிடத்தில் போர் புரிய மாட்டேன் என்று தன் உண்மை நிலையினை மறக்கிறான், தன் கர்மத்தினை மறக்கிறான். அவன் செய்ய வேண்டிய தொழிலினை மறக்கிறான். தர்மம் நிலைநாட்ட வேண்டும் என்ற உண்மையினை மறந்து நிலை குலைந்து போகிறான். அர்ஜூனன் போரிட மாட்டேன் என்று சொல்லி தேரில் அமர, கண்ணன் நியாயத்தினை எடுத்துரைக்க ஆரம்பிக்கிறான் என்று சொல்லி முடிகிறது முதல் அத்தியாயம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!


திருமாலின் திருவடியை தினம் நினையும்
பெருமானின் சேவையில் பெருந்தவம் புரியும்
திருவருளால் என்படியும் தன்படியென அறியும்
ஒருவேளையும் மறவாமல் அருள்வாய் பொழியும்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருப்பாவை நவின்று பொருட்பாவை தந்தீரே
திருமாலின் பிரபந்தத்தின் கருத்தாழம் நவிழ்ந்தீரே
திருவடி குருவடி தினம் பணிந்தீரே
திருச்சின்னம் புகழ்பரப்பும் அழகிய சிங்கரே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

புதுமைகள் புதுப்பித்து புதுமடம் தந்தவர்
புன்னகை பெருமானின் பூஜை கண்டவர்
புதுக் கல்வி பெருஞ்சோலை தந்தவர்
புகழ் பரப்பும் வேதபிரபந்தப் பாடசாலை காப்பவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

எழில் பொங்கும் எம்பிரான் நாராயணர்
எழிலாய் அவர்பெயரில் எட்டாய் வந்தவர்
எத்திக்கும் வைணவம் எளிதாய் பரவுவர்
எந்தையில் ராமானுஜ சித்தாந்தம் முனைபவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கருடசைலப் பெருமாளின் கருணை அஹோபிலமே
வருடவரும் தென்றலாம் வர்ண ஜாலமே
கருடகிரி நம்மாழ்வார் வித்திட்ட மாலோலமே
விருட்சத்தின் வழிவரும் மடத்தின் 45வதுபட்டமே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

மூலச் சிங்கர்களின் முத்தாய் அருட்பெற்று
மூன்று சிங்கர்கள் உடன் வரப்பெற்று
மூன்றின் ஒருவராய் வேத வழிப்பெற்று
மூத்த சிங்கரே! அழகிய சிங்கராய் பெயர்பெற்று
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருவள்ளூர் தேர் கொடுத்து பவணிவர
திருப்பத்தி யுலா பெருமானும் சிரித்துவர
திருவரங்க பெருமானின் புகழ் பரவிவர
திருநாடு சஞ்சாரம் ஓர்நாளும்தளராமல் செய்துவர
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கிரந்தங்கள் அவையாவும் பெருமாள் புகழ்பாடல்
கிரந்தங்கள் புகழ்மணக்கும் சபையாவும் உம்மால்
கிரந்தமும் வேதமும் நவிழும் வேதவிற்பன்னர் வாழ்வில்
கிரந்தவேத விற்பன்னரின் இக்காலம் பொற்காலம் உம்மால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

ஆண்டுக்கு இருமுறை வித்வான்களின் வித்வம்
ஆண்டுக்கு நான்குமுறை வேத பாராயணம்
ஆண்டாய் விற்பன்னர் உள்ளங்களின் உள்ளம்
ஆண்டு ஆசியோடு பெரும் பேறு பெற்றனம்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொர்ன மண்டபம் கொலுவிறுக்கும் திருமால்
சொல்லால் இனிக்கும் உப்பிலியப்பனுக்கோ! சொர்னபூணூல்
சொல்லி சொல்லி பூரிக்கிறோம் உந்தன் பெயரால்
சொல்லாமல் விட்டமையோ ஏராளம் உந்தன்அன்பால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொல்லால் பாடி சொல்லவந்தோம் நாடி
சொல்ல சொல்ல மணக்கும் சொற்குவியலோ கோடி
சொல்ல முடியுமா வார்த்தையில் 20ஆண்டுகள் ஓடி
சொல்லில் அள்ளமுடியா அருட்சேவை புரிந்ததைப் பாடி
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

Thursday 2 February 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 5



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது. அந்த வரிசையில் முதலில் நாம் ஆச்சாரியார்கள் மற்றும் மகான்கள் சொன்ன தெளிவுரைகள் சிலவற்றைப் பார்த்தோம். அந்த வரிசையில் நாம் இப்போது கவிஞர்கள், அறிஞர்கள், அறிவுசார் வித்தகர்கள் சொல்லும் சில எளியவுரைகள் பார்ப்போம். அதன் பிறகு நாம் ஸ்ரீமத்பகவத்கீதையின் எளிய உரையினைத் தொடர்வோம்.

முதலில் நாம் நம் மகாகவி பாரதியார் அவரின் உரையிலிருந்து தொடங்குவோம். மகாகவி பாரதியார் சமஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். கீதை மூல ஸ்லோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தின சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார். அவர் தம் அற்புதமான உரையில்

வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
சரண மன்றி இங்கோர் சரணில்லையே. - பாரதியார்

என்று அழகாகச் சொல்கிறார். பின் “புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம்”

மேலும் அற்புதமான அவர் தம் மொழியில் சொல்லும் இந்த விளக்கத்தினைப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் உணர்ந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.. “ ‘எல்லாம் சிவன் செயல்’ என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? ‘இட்டமுடன்’ என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?’ நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வழியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் ‘தொப்’பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்? ”. ஆஹா என்ன அற்புதமான விளக்கம் பாருங்கள். இதை உணராததால் தான் ஒவ்வொரு மனிதரும் துயரத்தில் ஆட்படுகிறார்கள். ஸ்ரீமத்பகவத்கீதையின் நோக்கமே கர்மம் செய், பலனை எதிர்பார்க்காதே, எல்லாம் அவன் செயல், நீ வெறும் ஆடப்படுபவன் மட்டுமே. ஆட்டுவிப்பவனுக்குத் தெரியும், எதை, எப்படி செய்ய வேண்டும் என்று. ஆகையால் இன்பம் வரும் போது ஆடாமலும், துன்பம் வரும் போது நோகாமலும் சம நோக்கில் எடுத்துக் கொள்ளும் போது மனம் பக்குவப்பட்டுவிடும்.

அடுத்து நம் கவியரசர் கண்ணதாசன் அவர்தம் ஸ்ரீமத்பகவத்கீதையின் விளக்கவுரையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம் “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் அருளிய அருளுரையில் மனிதன், பிறப்பிலிருந்து இறுதிவரை செய்ய வேண்டிய காரியங்கள் விவரிக்கும் கீதையின் கடைசியில், அவரவர் கடமையைச் செய்து பலனைத் தம்மிடம் ஒப்படைத்துவிட்டால் அதைத் தாமே ஏற்றுக்கொண்டு பலனளிப்பதாக பகவான் கூறுகிறார். அஞ்ஞானத்திலிருந்து அர்ஜூனனும் அதிலிருந்து விடுபட்டு அவரது ஆணைப்படி நடக்கத் தனது மனது பக்குவமடைந்து விட்டதாகக் கூறுவதுடன் கீதை முடிவடைகிறது. அறியாமை, மோகம், பேராசை, நான், எனது என்ற அகங்காரம் நீங்கி வாழ்ந்தால், கஷ்டம் குறையும்; விருப்பு, வெறுப்பற்ற முறையில் கடமையாற்றும் போது மனம் நிம்மதியடையும்.” என்று அழகாக கீதையின் மகத்துவத்தை அழகாக விளக்கி கவிஞரின் உரைக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

நம் கவிஞர் தம் முன்னுரையில் இப்படி சொல்கிறார் “முதலில் கண்ணன்  மனிதனா, தெய்வப் புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது. மனிதனாகப் பிறவி எடுத்து, மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது. மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்ட தெய்வம், மனித வாழ்க்கையோடு நேரடித் தொடர்பு கொள்வதில்லை. நேரடித் தொடர்பு கொள்ளாத தெய்வம், மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளில் அவ்வப்போது பங்கு பெறுவதில்லை. மனித சுபாவங்களில் பங்கு பற்றிக் கொண்டு, தெய்வ நிலைக்கு மனிதனை இழுத்துச் செல்லும் பாலமே பரந்தாமன்” என்று அழகாக கண்ணன் தோற்றத்தின் நோக்கத்தினைக் கூறுகிறார். மேலும் “மனிதனின் உணவு வகைகளில் இருந்து வாழ்க்கை முறைவரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்து காட்டி, இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தி, இகத்திலேயே ஜீவாத்மாவைப் பரமாத்மாவாக்க முயல்கிறார் கண்ணன்”.

அவர் தொடர்ந்து தன் முன்னுரையில் இன்னொரு எளிமையான விளக்கம் சொல்கிறார் அது “நல்லது, பகவான் வருணாசிரம தர்மம்பற்றிக் கூறுகிறார், அதை வலியுறுத்துகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே. விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால், “வருணாசிரமம் என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும். வருணாசிரமம் பிரிவு ஜாதிகளில் மேல்தட்டு, கீழ்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல, ஒரு சமூதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள் தாம்.

ஒன்று   :  நாட்டில் ஒழுக்கத்தையும், தர்மத்தையும் கட்டுப்பாட்டையும், கல்வியையும் வளர்ப்பது.

இரண்டு  : போர் புரிந்து நாட்டைப் பகைவர்களிடம் இருந்து காப்பது

மூன்று   : வாணிகம் தொழில் நடத்தி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது.

நான்கு   :  உடல் உழைப்பை மேற்கொண்டு, குடி இருப்புகள், சாலைகள், தொழிற்கூடங்கள்,உலைக் கூடங்கள்,               அமைத்து மேற்கூறிய மூவகையினருக்கும் உதவுவது. இந்த நாலாவது வகையில் விஞ்ஞானிகள்,
           மருத்துவர்கள் அனைவருமே அடங்குவார்கள்”

என்று நம் கவிஞர் எவ்வளவு எளிமையாக விவரித்துள்ளார் தம் விளக்கவுரையில்..

அடுத்து நம் புலவர் சுப.துளசி, இவர்தம் விளக்கவுரை ஒரு சிறப்புக்குரியது என்னவென்றால், இவர் அனைத்து 729 ஸ்லோகங்களையும் தமிழாக்கம் செய்ததோடு மட்டுமன்றி அதனை இவர்தம் பாணியில் எளிய தமிழில் பாவாக்கம் செய்திருக்கிறார். அவர் தம் முன்னுரையில் “ஒரே நிலையான மனத்துடன், ஒரே நிலையான அறிவைக் கொண்டு, நீ செய்யும் செயலின் பலனை எதிர் நோக்காது எக்காலமும் காலங்களின் தலைவனான என்னைத் தழுவியோர் என்றென்றும் விழுமிய செல்வம் பெற்று வாழ்தலோடு விண்ணவர் உலகையும் ஆள்வர் என்று பின்னிரெண்டாம் அத்தியாயத்தில் கண்ணன் பார்த்தனுக்குப் பகிர்கிறான்” என்று அழகாகச் சொல்கிறார்.

மேலும் “ஓம், தத் ஸத், என்பதன் விளக்கத்தை பதினேழாம் அத்தியாயத்திலும் அதை எங்கெங்கு ஏன்? பயன்படுத்துகிறார்கள் என்பதையும் உணர்த்தினான்: மூவகைக் குணம், மூவகை உணவு, மூவகை யாகம், மூவகைத் தவம், மூவகைத் தானம், சொன்னது இந்த அத்தியாயத்திலே. மூவகை வீரம், மூவகைப் பத்தி தன்னைப் பதினெட்டாவது அதிகாரத்தில் கூறி தன் மனக் கருத்தைப் புலப்படுத்துகிறான். தான் யாரில் யார்? எதனில் எது? பக்தி அவசியமாவது ஏன் என்பதையும் அங்கு அவன் உள்ளங்கை நெல்லியென உணரும் வகையில் புலப்படுத்துகிறான்” என்று அழகாகச் சொல்லுகிறார்.

அடுத்து உரையாசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்தம் உரையிலிருந்து “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய். உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று கீதையில் அருளியிருக்கிறார் பரமாத்மா. பல புகழ் பெற்ற சமஸ்கிருத மேதைகள், மற்றும் பலர் கீதையை தங்கள் மொழியில் மொழி பெயர்த்து மொழிக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். நமது தாய்மொழி தமிழிலும் பல நூறு கீதைகள் வெளி வந்துள்ளன... மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கீதையை நன்றாகக் கற்பது கடமையாகும். பத்மநாபனான பரமாத்மாவுடைய முகத்தாமரையால் பொங்கி வந்தது கீதை” என்று சொல்லுகிறார்.

மேலும் அவர்தம் உரையில் “ ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத்கீதை எழுநூற்று நாற்பத்துஐந்து சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்களை கொண்டது. மனித வாழ்வின் ரகசியத்தைக் கொண்ட கீதையை மனதில் நிலைநிறுத்தி இறைவுணர்வுடன் இருந்தால் அதுவே இறைவனைச் சென்றடையும் வழியாகும்” என்று இவர்தம் உரையில் விளக்கியுள்ளார்.

எண்ணற்ற மகான்கள், அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், மேதைகள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

நாளை முதல் ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களின் அடிப்படையில் எண்ணற்ற உரைகளின் மேற்கோள்களின் வழிகாட்டுதல் படியும் நாம் நம் எளியவுரைக்குச் செல்வோம் நண்பர்களே!

Tuesday 31 January 2012

ஸ்ரீமத் பகவத்கீதை - பாகம் 4


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் நான்காம் பாகத்தை தொடர்வோமா

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையாகப் பார்த்தோம். இந்த ஸ்ரீமத்பகவத்கீதைக்கு எண்ணற்ற தெளிவுரைகள், எளிய உரைகள் மற்றும் அதன் சாராம்சங்கள் விளக்கி பல ஆச்சாரியர்கள், ஞான பண்டிதர்கள், அறிஞர்கள், தமிழ் வித்தகர்கள், ஆசான்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்துமே மூலத்தின் அடிபிசகாமல் அதன் கருத்து மற்றும் தொன்மை மாறாமல், என்ன சொல்ல வேண்டுமோ, எப்படி எளிய முறையில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லப் பட்டுள்ளது.

இதில் நாம் ஒரு சில தெளிவுரைகளிலிருந்து அவர்களின் ஆக்கத்தினை அப்படியே பார்ப்போம் அதன் பிறகு நாம் அந்த மூலத்தின் அடிபிறழாமல் அந்த கருத்து மாறாமல் அதன் வழி எளிய முறையில் எப்படி பகவான் பார்த்தனுக்கு எளிய முறையில் எண்ணற்ற கருத்துகளைச் சொல்லியிருக்கிறான் என்று பின் வரும் பாகங்களில் பார்ப்போம்.

முதலில் நம் ஆதிசங்கரரின் ஸ்ரீமத் பகவத் பாகவத்திலிருந்து அவர் மொழியில் சொல்லப்பட்ட கருத்துகளின் சாராம்சம்..ஸ்ரீமத் பகவத் பாகவத்தின் மூலம் மாறாமல் அப்படியே திரு.மகாதேவ சாஸ்திரி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில் இருந்து நாம் பார்ப்போம்.

”The aim of this famous Gita Sastra is, briefly, the Supreme Bliss, a complete cessation of Samsara or transmigratory life and of its cause. This accrues from that Religion (Dharma) which consists in a steady devotion to the knowledge of the Self, preceded by the reunciation of all the works. So, with reference to this Religion, the doctrine of the Gita, the Lord says is the Anu-Gita as follows:- "That religion, indeed, is quite sufficient for the realisation of the state of Brahman, the Absolute" (Asv.Parva xvi.12). In the same place it is also said "He is without merit and without sin, without weal and woe - he who is absorbed in the one seat, silent and thinking nothing". And he also says: "Knowledge is characterised by reunciation"

மேலும் அவரின் உரையில் “ The Gita Sastra expounds this twofold Religion (Dharma & Karma),whose aim is the Supreme Bliss. Thus the Gita Sastra treats of a specific subject with a specific object and bears a specific relation(to the subject and object). A knowledge of its teaching leads to the realisation of all human aspirations."

இதன் தமிழாக்கம் செய்யப்பட முயற்சிக்கவில்லை. இது எளிதாகவும், புரிந்து கொள்ளும் தன்மையுடன் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதன் சாராம்சம் மற்றும் சொல்ல வந்த கருத்து மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையில் இதனை தமிழாக்கம் செய்யவில்லை.

அடுத்து தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் மொழியில்

“ஹே கிருஷ்ண கருணஸிந்தோ தீனபந்தோ  ஜகத்பதே
 கோபேச கோபிகா காந்த ராதா காந்த நமோஸ்துதே”

என்று முதலில் தன் குருமார்களையும் பின் தன் ஆச்சார்யர்களையும் வணங்கிவிட்டு, பின்னர் கிருஷ்ணரை இவ்வாறு வணங்கி தன் உரையினை ஆரம்பிக்கிறார். அதாவது என்னருமை கிருஷ்ணா, படைப்பின் மூலமும், பரிதவிப்பவர் நண்பனும் நீயே, கோபிகளின் நாயகனும், ராதாராணியின் நேசனும் நீயே, உனக்கு எனது வணக்கங்கள் என்று வணங்கி ஆரம்பிக்கிறார்.

”பகவத் கீதை என்றால் என்ன? பௌதிக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும் எனக் கூறுகிறார். மேலும் அர்ஜூனன் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவருமே பௌதிக இருப்பால் துன்பம் மிகுந்திருக்கின்றோம், நமது நிலையே நிலையற்ற தன்மையால் நாம் அச்சுறுத்தப்படக் கூடியவர்களல்ல. நம் உண்மை நிலையோ நித்தியமானது. ஆனல் எவ்வாறோ அஸத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். “அஸத்” என்பது இல்லாததைக் குறிக்கின்றது” என்கிறார்.

மேலும் அவர் தன் விளக்கவுரையில், “துன்பப்படும் பற்பல மனிதர்களுக்குள், ஒரு சிலரே தங்கள் நிலையைப் பற்றியும், தாங்கள் யாவர். இது போன்ற விரும்பத்தகாத சூழ்நிலையில் தாங்கள் வைக்கப்படக் காரணம் யாது, என்பன போன்றவற்றைப் பற்றியும் ஆராய்வார்கள். தனது துன்பத்தை வினவும் இந்நிலைக்கு எழுப்பப்படாவிடில், தனக்குத் துயர் வேண்டாம்- துயருக்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று உணராதவரை, ஒருவன் பக்குவமான மனிதன் என்று கருதப்படுவதில்லை. ஒருவன் மனதில் இவ்விதமான ஆராய்ச்சி எழும் நிலையிலேயே மனிதத்தன்மை துவங்குகின்றது. “ப்ரஹ்ம சூத்திரத்தில்” இந்த ஆய்வு, “ப்ரஹ்ம ஜிகஞாஸ” என்றழைக்கப்படுகின்றது. பூரணத்தில் இயற்கையை ஆயும் வரை மனிதனின் ஒவ்வோர் செயலும் தோல்வியாகவே கருதப்படுகின்றன. எனவே தாங்கள் ஏன் துன்புறுகிறோம் என்று வினவத் துவங்குபவர்களும், எங்கிருந்து வந்தோம், மரணத்திற்குப் பின் எங்கு செல்வோம் என்று ஆய்பவர்களுமே, பகவத்கீதையை பயிலத்தகுந்த மாணவர்களாவர்” என்று அழகாக கூறுகிறார்.

அடுத்து ஸ்ரீமத் சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் “வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன, மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதஙகளைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால், பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரடியாக பாலைப் பெற்றுக் கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை” என்று எளிமையாக தனது தொடக்கவுரையில் விளக்குகிறார்.

மேலும் அவர் ஸ்ரீமத்பகவத் கீதை ஏன் போர்களத்தில் புகட்டப்பட்டது என்று சொல்லும் போது “பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம், எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டு போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாத மக்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் வேண்டுமென்று தாயிடம் பிள்ளை அழுது பெறுகிறது. அது ஒரு விதப் போராட்டம். ஒரு வேலையில் அமர்தம் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகின்றான், அதுவும் போராட்டமே.... சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்று போராட்டத்திற்கு மனிதன் தகுதியுடையவன் ஆக வேண்டும்” என்று ஸ்ரீமத்பகவத் கீதை வியாக்கியானத்தில் அழகாகச் சொல்லுகிறார்.

அடுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ஸ்ரீமத்பகவத் கீதை எனும் நூலின் முகவுரையிலிருந்து “ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் அதன் பெருமையை விளக்கும் முத்திரை உள்ளது. “இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸு உபநிஷதஸு ப்ரஹ்மவிதயாயாம யோகசாஸ்த்ரே ஸ்ரீகிருஷ்ணார்ஜுன ஸம்வாதே” என்று வேதத்தின் சிரத்தில் உள்ளது தான் உபநிஷத்து எனப்படுவது. ஆனால் கீதைக்கும் அந்த உயர்ந்த ஸ்தானம் அளிக்கப்படுகிறது....  இது பிரம்மவித்தையாகவும் தலை சிறந்த யோக சாஸ்திரமாயும் ஜீவாத்ம பரமாத்ம ஸம்பாஷ்ணையாயும் விளங்குகின்றது” என்று அழகாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பகவானை அன்புடன் வழிபடுவோர் அவர் அளிக்கும் ஞானக்கண் கொண்டு அர்ஜூனன் விசுவரூபத்தை தரிசித்தாற் போல அவருடைய திருவுருவைக் காணுதல் கூடும். எனது உண்மையான ஸ்வரூபத்தைப் பக்தி ஒன்றினால் தான் அறியலாம். அங்ஙனம் அறிந்தவன் விரைவில் என்னுடன் ஒன்றுபடுகிறான் என்று கூறுகிறார் பகவான்.

பக்த்யா மாமபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத:
ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே ததனந்தரம்.

இப்படி யாகமும் யோகமும் சித்தி பெற்றால் அதுவே தியாகம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் “கீதா, கீதா” என்று தொடர்ச்சியாகச் சொன்னால் “தாகீ, தாகீ” அல்லது “தியாகீ, தியாகீ” என்று வரும், தியாகியாயிருப்பது தான் கீதையின் முடிவான உபதேசம் என்பார்” என்று அழகாகச் சொல்கிறார் கீதையின் சாராம்சத்தை.

எண்ணற்ற மகான்கள் கீதைக்கு தெளிவுரை, விளக்கவுரை மற்றும் எளியவுரை சொல்லி அருளியிருக்கின்றனர். அவர்களின் அனைவரின் உரையின் ஒரு சில பகுதிகளை எடுத்து பார்த்தோமேயானால் அதற்கே பல பாகங்கள் வேண்டும், ஆகையால் அவர்களின் அருளாசியோடு நாம்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.

அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. நாளை கவிஞர்கள் பாரதியார், கண்ணதாசன், துளசி, கிருஷ்ணா போன்றோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு நம் எளியவுரையின் தொடக்கத்தினை நாளை மறுநாளிலிருந்து ஆரம்பிப்போம்.

Sunday 22 January 2012

சுகமான சுமைகள் - பாகம் 2 (பெண்)


பெண்ணே!
உன் படைப்பில் தான்
உலகம் தினம் துளிர்கிறது
உன் உன்னதத்தில் மலர்கிறது....


நீ சோர்ந்து போனால்
உலகம் வாடி போகும் பார்த்திருக்கிறாயா
தினம் மலரும் மலர்
மலராவிட்டால் பூஞ்சோலை ஏது...


பெண்ணே!
நீ ஆனந்த கண்ணீரிட்டால்
மழையாய் பூமி ரசிக்கிறது
நீ அழுது கலங்கும் போது
சுனாமி பேரலைகளால் 
உன் கண்ணீரினைத் துடைக்கிறது பூமி...


பெண்ணே!
உன் கோபக் கனல் தானே
கதிரவன் அக்னிநட்சத்திரமாய் எரிக்கிறான்
உன் மிளிரூட்டும் பார்வையில் தானே
நிலா குளிர்கிறது மனதோடு...


பெண்ணே!
ஒப்பீடு வெறும் வார்த்தை அல்ல
ஒப்பீடு உணர்வுகளின் குவியல்கள்...


பெண்ணே!
உன்னை ஒப்பிட்டு உலகம் ரசிக்கிறது
உன்னை மட்டுமே ஒப்பீட முடிகிறது
உலகில் அனைத்திற்கும் - ஆம்
உலகின் அற்புதம் நீ
உலகின் ஆனந்தம் நீ..

சுகமான சுமைகள் - பாகம் 1 (பெண்)


பெண்ணே!
சுமப்பதால் சுமை என்றாயோ - இல்லை
சுமந்ததால் சுமை என்றாயோ...

சுமை சுமப்பதில் இல்லை தெரியுமா
சுமை எண்ணத்தில் இருக்கிறதாம்
சுமை தத்துவம் விஞ்ஞானம் சொல்கிறது...

சுமை தூக்கும் உழைப்பாளியும்
சுமை தூக்கும் கழுதையும்
சுமையான பழுதூக்கும் வீரனும்
சுமை தூக்குவது எளிதாக பயிற்சியில்
சுமை தூக்கலாம் எண்ணத்தின் வலிமையில்...

சுமையல்ல தோழியே!
சுமக்கிறதாம் எறும்பு 800 மடங்கு
தன் உடலின் எடையை விட
அது தெரியுமா?

பெண் ஓர் உன்னதம்
சுமப்பதால் தாயாகிறாள்
சுமந்ததை உயிர்ப்பிப்பதால் கடவுளாகிறாள்...

பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உனை நீயே கழுதையாக்காதே...

பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உன் சிசுவை நீயே பொதியாக்காதே!

பெண்ணே!
படைப்பின் உன்னதம் நீ
பெட்டையாக்கி பேதைக் கொள்ளாதே...

பெண்ணே!
உலகின் உயிர்துடிப்பு நீ
உலகின் உயிர்நாடி நீ
நன்றாக இதயத்தில் கேட்டுப்பார்

தென்றல் காற்றினை மொழியாக்கி
உன் பெயர் சொல்லி மகிழ்கிறது...

அலையின் சத்தம்
அம்மா என சொல்லி
உனைத் தேடி வருகிறது தெரியுமா?

நீர் வீழ்ச்சியும், நீரோடை நீரும்
காற்றின் அசைவில் இலைகளும்
ரீங்காரமிடும் வண்டுகளும்
பெண்ணே!
அம்மா என அழகாச் சொல்கிறதே
அறியாயோ நீயும்
கேட்டுப்பார் இதயத்தோடு ஒவ்வொருமுறையும்...

உலகின் உன்னதம் பெண்
உலகின் நிரந்தர தத்துவம் பெண்...

Saturday 21 January 2012

ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 3


ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 3

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது

பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையின் மூன்றாம் பாகத்தை தொடர்வோமா

ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். பிறகு கர்மம் என்றால் என்ன என்றும், ஆளுமைக்கு உட்படாதது எதுவுமே பௌதிக இயற்கையில் இல்லை என்றும், குணங்களின் வகைகள் என்னவென்றும் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக

இந்த பௌதிக இயற்கையில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் இங்கேயே தோன்றி இங்கேயே முடிவதை நாம் காண்கிறோம் அல்லவா, உதாரணமாக ஒரு பழம் எடுத்துக்கொண்டோமேயானால் அது இங்கேயேத் தோன்றி அது இங்கேயே அழுகி அது இங்கேயே தன்னை முடிவுக்கு கொண்டு வருகிறது, அப்படிப்பட்ட இந்த நிச்சயமற்ற உலகிற்கு அப்பால் “சநாதனம்” என்று அழைக்கப்படும் நித்தியமான வேறு ஒரு இயற்கையை உடைய ஒரு உலகம் விவரிக்கிறது. இதையே ஸ்ரீராமானூஜாச்சாரியார் ஆரம்பமும் முடிவும் அற்றது என்று சொல்கிறார். இதை எப்படி சொல்வது என்றால் நெருப்பில் இருந்து எப்படி வெம்மையினைப் பிரிக்க முடியாதோ அல்லது நீரிலிருந்து திரவத்தன்மையினைப் பிரிக்க முடியாதோ அது போல் ஒவ்வொரு ஜீவன்களுக்கும் சநாதன தர்மமானது நித்தியமாய் ஜீவனுடன் இணைந்திருக்கிறது. அது என்னவென்று எளிமையாக பார்ப்போமேயானால் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தர்மம் வகுக்கப்பட்டிருக்கிறது அதாவது ஒரு நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

அது எப்படி என்றால் ஒரு நிறுவனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதில் ஒருவன் முதலாளி என்றும், பிறர் வேலை செய்யும் ஊழியர்கள் என்றும் இன்னும் பிறர் அதோடு வர்த்தகம் செய்வோர் என்றும் இன்னும் பிறர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்றும் இருக்கிறார்கள். ஆக ஒருவனின் நியதி அல்லது தர்மம் மற்றவனைச் சார்ந்து வருகிறது. இன்னும் எளிமையாக விளக்க முயன்றால் ஒரு வீட்டில் சமையல் செய்யப்படுகிறது. அதைச் செய்யும் மனைவி அதை ஒரு ஆத்ம திருப்தியுடன், பரிபூரண சந்தோசத்துடன் செய்யாமல் இருக்கும் போது அந்த உணவே தோஷமாகி விடுகிறது. அதுவே அந்த மனைவி சந்தோஷத்துடன், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உணவளித்து உபசரித்து, தன் வீட்டில் உள்ள அனைவரும் உண்டபின் அவள் உட்கொள்ளும் போது அந்த உணவு பிரசாதமாகி அந்த வீட்டிலே சுபிட்ஷம் உண்டாகிறது. எல்லையற்ற மகிழ்ச்சி திளைக்கிறது. ஆக நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் யாகம் செய்து கொண்டு தான் இருக்கிறோம், எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். வெறும் நெருப்பினை வளர்ப்பதும் அதுவே ஆத்ம திருப்தியுடன் வளர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நமக்கு புரியும் போது நமது வாழ்வு அர்த்தமாகிறது.

சரி, நாம் சநாதன தர்மம் என்றால் என்னவென்று பார்த்தோம். ஜீவாத்மாக்களின் வாழி என்று பகவான் சொல்லுகிறார் அதையும் எளிமையாக பகவானே விளக்குகிறார் ஸ்ரீமத்பகவத்கீதையில், பதினைந்தாம் அத்தியாயத்தில் பௌதிக உலகின் உண்மைச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வமூலமத: ஸாகமஸ் வத்தம் ப்ராஹுரவ்யயம் |
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேதஸ வேதவித் || 15- 1||

இந்த பௌதிக உலகம் வேர்களை மேலும் கிளைகளைக் கீழும் கொண்ட மரமாக வர்ணிக்கப்படுகிறது. அது எப்படி, ஒரு நீர்த்தேக்கத்தில் மரத்தினைப் பார்க்கும் போது மரங்கள் தலைகீழாக நிற்பதைக் காணலாம், அதன் கிளைகள் கீழே செல்ல, வேர்கள் மேல் நோக்கி இருக்கின்றன. ஆன்மீக உலகின் பிரதிபலிப்பேயாகும். இவ்வுலகம் உண்மையின் நிழலே, நிழலின் உண்மையோ, ஆதாரமோ இல்லை. ஆனால் நிழலிருந்து பொருளையும் அதன் உண்மையையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா. அதையும் பகவானே எளிமையாக விளக்குகிறார்.

நிர்மாநமோஹா ஜிதஸங்க தோஷா அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த் வைர்விமுக்தா: ஸுகது: கஸம்ஜ்ஞைர்கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் || 15- 5||

சரி நாம் எப்படி இந்த் ஆன்மீக உலகினை அடைவது என்பதற்கு தான் பகவான் இந்த விளக்கத்தைச் சொல்கிறார். ஒருவன் தலைவனாகவும், ஒருவன் நிலப்பிரபுவாகவும், ஒருவன் பணக்காரனாகவும், ஒருவன் பிரதமராகவும், ஒருவன் அமைச்சனாகவும் இப்படி ஏதோ ஒரு உயர் நிலையினை அடைய ஒவ்வொரும் பெற விரும்புகின்றனர். நிலையற்ற இந்த உடலின் மீது பற்றுக் கொண்டு அந்த உடலின் இச்சையினைத் தீர்க்க தங்களது கடமைகளிலிருந்து விடுபட்டு அவர்கள் கட்டுப்பாடற்ற ஆசையில் துடிக்கிறான், அப்படி இந்த உடல் மீது உள்ள விருப்பினை விட்டு அந்த பரபிரும்மம் நோக்கி அவன் தன் கடமைகளைச் செய்வானாயின் அவன் எளிதாக ஆன்மீக உலகினை அடையலாம் என்று கூறுகிறான்.

அதற்கு அர்ஜூனன், மதுசூதனா! என்னால் இந்த யோக நிலைக்கு வரமுடியாது, மனம் நிலையற்றது, அமைதியற்றதாக இருக்கிறது என்று சொல்கிறான். இதை தான் நாம் ஒவ்வொருவரின் மன நிலைமையும் கூட, அதற்கும் கண்ணன் எளிமையாக விளக்கம் சொல்கிறான்.

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா|
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​: ||6-47||

பார்த்தா!, இந்த யோக நிலை வெகு எளிது, ஆத்மார்த்தமாக பிரம்ம சேவையில் ஈடுபடும் போது இந்த யோகம் நிலை அடைகிறார்கள். அதாவது ஒவ்வொரு செயலிலும் தான் என்ற அகந்தையினை விட்டு, அந்த பரபிரம்மத்தின் பொருட்டே என்று விட்டுவிட்டு, எந்த செயலிலும், மனதிலும் ஆத்மார்த்தமாக அந்த பரபிரும்மமை நோக்கும் போது இந்த யோக நிலை வந்து விடும் என்று சொல்கிறார். உண்மை தானே, தான் தனக்கு என்று ஒரு செயல் செய்து அதன் பிரதிபலன் பார்த்து ஏமாறும் போதும், சந்தோசம் அடையும் போது அது தற்காலிகம் என்பதை நாம் எப்போது உணரபோகிறோம். அந்த உணர்வு வரும் போது அந்த சந்தோசம், துக்கம் இரண்டும் சமமாகி விடுகிறது அல்லவா.

இறுதியாக, கண் பார்வை இழந்த திருதுராஷ்ட்ரர் துக்க நிலையில் இருக்கிறார், போர் நடக்கிறது, அந்த யுத்த களத்தில் என்ன நடக்கிறதோ என்று பரிதவித்து இருக்கிறார், அப்போது வேதவியாசர் தனது அதீத சக்தியால் திருதுராஷ்டரரே உமக்கு ஞான கண் தருகிறேன் என்று சொல்கிறார், அதற்கு திருதுராஷ்டரர், எனக்கு வேண்டாம், வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொல்ல அப்படி சஞ்சயன் எனும் மதிநுட்பமான அமைச்சனுக்கு கொடுக்க அவர் தன் ஞானக் கண்ணால் யுத்தக் களத்தில் நடைபெறும் காட்சிகளை விவரிப்பதாக ஆரம்பமாகிறது இந்த ஸ்ரீமத்பகவத் கீதை. ஒவ்வொரு காட்சியாய் விளக்கி கொண்டு வருகிறார். யுத்த களம் ஜனக்கூட்டத்தில் நிறைந்திருக்கிறது, ஒரு பக்கம் பாண்டவர்களும் மறுபக்கம் கௌரவர்களும் இருக்கிறார்கள். அப்போது கண்ணன் தனது பஞ்சசன்யம் எனும் சங்கு எடுத்து ஊத, பார்த்தன் தேவதத்யம் எனும் சங்கு எடுத்து ஊத, போர் ஆரம்பமாகும் அறிகுறி தெரிகிறது. அந்நேரத்தில் போர்களத்தில் நடுவில் வந்த ரதத்தின் இருந்து அர்ஜூனன் எதிர்திசையில் நிற்கும் தன் உற்றார் உறவினர்களைப் பார்த்து தான் போர் புரியமாட்டேன் என்று கண் கலங்கி கண்ணனிடம் கூறுகிறான். அப்போது கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துரைக்கு ஞான உபதேசம் தான் இந்த ஸ்ரீமத்பகவத்கீதை.

சரி, இவ்வளவு பெரிய ஸ்ரீமத்பகவத்கீதை 700 ஸ்லோகங்களும், 18 அத்தியாயங்களும், முதல் ஆறு கருமத்தைப் பயனில் பற்றின்றி பிரம்மார்ப்பணமாக செய்யும் மார்க்கமும், நடு ஆறு அத்தியாயங்களில் பக்தி மார்க்கமும் கடைசி ஆறு அத்தியாயங்களில் ஞான மார்க்கமும் கூறும் வரை போர் களத்தில் அனைவரும் சும்மா இருந்தார்களா எனும் ஒரு கேள்வி எழும், அதற்கும் விளக்கம் இருக்கிறது.

சஞ்சயன் ஒவ்வொரு காட்சியினை விளக்கி கொண்டு வரும் போது பார்த்தன் போர் புரியாமல் தேரில் சாய்ந்து விட்டான் என்றும், கண்ணன் அவனுக்கு உபதேசம் சொல்கிறான் என்றும் சொல்கிறார். அப்போது, யுத்தத்தின் தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறது அங்கே, சங்கு ஊதிய போதும், கொடி அசையாததால் போர் தொடங்காமல் இருக்கிறது. அது தான் யுத்த தர்மம், சங்கு ஊதி, கொடி அசைத்து இருவரும் ஒத்து போர் தொடங்கலாம் என்று சொல்லும் போது தான் போர் முறையாகத் தொடங்குகிறது. அது வரை இருவரும் காத்திருக்க வேண்டும். இந்த யுத்த முறை இன்றும் கடைபிடிக்கப்படுவதை காணலாம் செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் செல்லும் போர்களங்களின் பாதையில் செல்லும் போது யாரும் அதை தாக்க கூடாது என்பது யுத்த தர்மம். அப்படி யுத்த தர்மம் மீறப்படும் போது அதன் விளைவுகள் அவர்களே அவதிபடும் போது உணரமுடிகிறது.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் பிறதகவல்களோடு நாளை சந்திப்போம்.

அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. நாளை ஆச்சார்யர்கள் மற்றும் குருமார்கள் சொல்லும் விளக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம் பிறகு
கவிஞர்கள், அறிஞர்களின் விளக்கத்தினைப் பார்த்துவிட்டு நாம் எளியவுரைக்கு செல்வோம்.

Thursday 19 January 2012

ஸ்ரீமத் பகவத் கீதை - பாகம் 2


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று தொழுது


பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய
உரையின் இரண்டாம் பாகத்தை தொடர்வோமா

ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் என்ன, அது யாருக்கு முதலில் சொல்லப்பட்டது

என்றும், இப்போது சொல்ல வந்த நோக்கம் என்னவென்றும் பார்த்தோம். அதன்

தொடர்ச்சியாக

அர்ஜூனன் ஜீவாத்மாவுக்குப் பிரதிநிதி: கிருஷ்ணன் பரமாத்மா.. ஸ்ரீமத் பகவத் கீதை என்பது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள்.

இந்த உரையாடல்கள் உயிருட்டமுள்ள நல்ல தகவல்களை அந்த பரம்பொருளே சொல்லும் பாங்கில் அமைந்தது தான் ஸ்ரீமத் பகவத்கீதை.

எப்படியென்றால் பாரதப்போரில் அர்ஜூனனுக்குச் சாரதியாக மட்டும் கண்ணன் இல்லை, அந்த பரம்பொருளின் கீழ் தாழ்படிபவர்களுக்கு அனைவருக்குமே அவன் சாரதி தான். சரீரமே தேர், இந்திரியங்களே குதிரைகள், ஸம்ஸார வாழ்க்கையே யுத்தம்.

வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை மறக்கும் போது அதை மீண்டும் நிறுவவே முக்கியமாக பகவான் அவதாரம் நிகழ்கிறது. அர்ஜூனன் அனைத்து கலைகளையும் தேர்ந்த ஒரு ஜீவாத்மா, ஆனால் உலகத்தாருக்கு இந்த அருமையான கீதை சொல்லப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில், அர்ஜூனன் போர்களத்தில் தடுமாறுவது போலவும் அதன் மூலம் பரம்பொருள் இந்த கீதாஉபதேசம் செய்கிறார். இதுவும் அந்த மலைமூர்த்தி கண்ணன் போட்ட அற்புதமான ஒரு திட்டம். சில நேரங்களில் சிறார்களுக்கு புரியவைக்க நாம் இத்தகைய செயல்கள் ஈடுபடுவதை உணரலாம். ஆம் நாம் அனைவருமே அந்த பரம்பொருளை உள்ளத்தில் வைத்திருக்கும் ஜீவாத்மாக்கள் தான். நாம் அதனை உணரும் வரை இந்த கலியுகத்தில் நடைபெறும் செயல்களில் உழல்வதை தவிர வேறு வழியில்லை.

ஸ்ரீமத் பகவத்கீதையில் ஐந்து ஆதார உண்மைகளை உள்ளடக்கி மனிதன் வாழ்க்கை லட்சியத்தினைப் பக்குவப்படுத்திக் கொள்ள பல வழிமுறைகள்
சொல்லப்பட்டுள்ளன. ஈஸ்வரன் எனும் ஆள்பவரும், ஜீவன்கள் எனும்
ஆளப்படுபவர்களும் இருக்கின்றனர். உலகில் ஜனித்த அனைத்துக்குமே தாங்கள் ஆளப்படுபவர்களே என்ற உண்மை நிலையினை உணர வேண்டும். எவன் ஒருவன் தன்னை தானே பெரிதுப்படுத்தி, தனக்கு தானே நிகர் என்றும், தன்னை ஆள யாரும் இல்லை என்று நினைக்கிறானோ அப்போதே அவன் அந்த நிகரற்ற இன்பத்தில் இருந்து விடுபட்டு துன்பத்தில் பயணிக்கத் தொடங்குகிறான்.

ப்ரக்ருதி (அகிலம்) (பௌதிக இயற்கை), காலம் (பௌதிக இயற்கையின் தோற்றம் அல்லது இவ்வகிலமுழுதின் நிலைப்புக் காலம்), கர்மம் (செயல்) இவையாவும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பகவத்கீதையின் பின் அத்தியாயங்களில் விளக்கப்படுவதைப் போல் பிரபஞ்ச விவகாரங்களிலும், பௌதிக இயற்கையிலும் இறைவனுக்கு உயர் அதிகாரம் உண்டு. பௌதிக இயற்கை சுதந்திரமானது அல்ல என்றும் இந்த ப்ரக்ருதி தன் ஆணைக்கு கீழ் இயங்குகின்றது என்றும் உணர்த்துகிறார் கிருஷ்னர். இதன் மூலம் ஒரு உண்மை புலப்படுகிறது, ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்கவே முடியாது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஏழாம் அத்தியாயத்தில் ஐந்தாம் பதத்தில் இது தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளது.  “அப்ரேயம் இதஸ்த்வன்யாம்”, இந்த ப்ரக்ருதி, எனது
கீழ்நிலை இயற்கையாகும். “ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்”, அதாவது இந்த ப்ரக்ருதிக்குப் பிறகு வேறு ஒரு ப்ரக்ருதி இருக்கிறது ஜீவபூதம் - உயிர்வாழி (ஜீவாத்மா) என்று சொல்லுகிறார்.

ஒருவன் ஒரு வணிகம் செய்கின்றான் என்றால் அவன் அதில் லாபம் வரும் போது சந்தோசமடைகிறான் அதே நேரம் அதில் நஷ்டம் வரும் போது
வருத்தமடைகின்றான், இரண்டுமே அவன் செயல்கள் தான் அந்த இரண்டில்
அவனே சந்தோசமடைவதும், துக்கமடைவதும் செய்கிறான். அவன் செயல்களுக்கு ஏற்ப அவன் நிலை பாவிக்கப்படுகிறது. அதாவது அவன் செயல்கள் அவனை வழிநடத்துகிறது. இதுவே கர்மம் என்றுச் சொல்லப்படுகிறது. கர்மம் என்றால் செயல். ஒருவன் என்ன விதைக்கிறானோ அதுவே அவன் அறுவடை செய்ய முடியும். நல்ல விதை விதைத்து அவன் உழும் செயல் பொறுத்து அவனது அறுவடை அமைகிறது.

ஸ்ரீமத் பகவத்கீதை ஈஸ்வரன் (பரமபுருஷன்), ஜீவன் (உயிர்வாழி), ப்ரக்ருதி
(இயற்கை), நித்தியமான காலம், கர்மம் (செயல்) ஆகிய ஐந்தையும் பற்றி அழகாக விவரித்துக் கூறுகிறது. கர்மம் தவிர மீதமுள்ள நான்கும் நிலையானதாகும், ஆனால் கர்மம் நிலையற்றதாகும்.

இந்த பௌதிக இயற்கை பகவானிடமிருந்து பிரிந்த சக்தியாகும். நித்தியமான உறவு கொண்டவை. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து செய்த செயல்களின் பலன்களை நாம் துன்புறவோ, இன்புறவோ, செய்கிறோம். ஆனால் நமது செயல்கள் அல்லது கர்மத்தின் விளைவுகளை நம்மால் மாற்ற இயலும், நமது அறிவின் பக்குவத்தைப் பொறுத்து இது அமைகிறது. இது அழகாக பகவத்கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. அதையும் வரும் வாரங்களில் நாம் பார்க்கலாம்.

இந்த பௌதிக இயற்கையானது மூன்று குணங்களால் அமைந்ததாகும் அவை
நற்குணம், தீவிரக் குணம், அறியாமைக் குணம் என்பன ஆகும், அதாவது ஸத்வ, ரஜோ, தமோ குணங்களாகும். அதைப் பற்றிய விவரங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

உடல் சம்பந்தமான கருத்துக்களிலிருந்து ஒருவனை விடுதலை பெறச் செய்வதற்காகவே ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜூனன் அந்த உடலின் மேல் பற்றுக்கொண்டு தன் முன்னால் நிற்கும் கௌரவர்களைப் பார்த்து அவர்கள் உறவுமுறையாகிவிட்டனரே அவர்களை நாம் எப்படி எதிர்ப்பது, எவ்வாறு போரிட்டு கொல்லுவது என்று நிலை தடுமாறி இருக்கும் போது

देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா தேஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||

யதா தேஹிந: = எப்படி ஆத்மாவுக்கு
அஸ்மிந் தேஹே = இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா = பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும்
ததா தேஹாந்தரப்ராப்தி = அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீ⁴ர தத்ர ந முஹ்யதி = தீரன் அதில் கலங்கமாட்டான்

இந்த ஆத்மாவுக்கு இவ்வுடலில் எப்படி இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அவ்வாறே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. ஒரு வீரன் அதை நினைத்து கலங்ககூடாது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மற்றொரு பகுதியினை மறுப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல, ஏனெனில் ஒன்றைச் சார்ந்தே மற்றொன்று விவரிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அர்ஜீனன் கண்ணனை குருவாக ஏற்றுக்கொண்டு கண்ணனையே பரபிரம்மாக ஏற்று அவர் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். “கரிஷ்யே வசனம் தவ” உங்கள் வாக்குப்படி நான் செயல்படுகிறேன் என்றும் சொல்கிறான்.

மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.


அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:

1. ஸநாதன வெளி என்றால் என்ன?
2. ஸ்ரீராமானுஜாசாரியர் ஸநாதன வெளி பற்றி என்ன சொல்கிறார்?
3. கிருஷ்ணர் என்றால் என்ன?
4. கீதையில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன, எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

Wednesday 18 January 2012

பகவத் கீதை - பாகம் 1

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.


என்று தொழுது


பின்னேநின்று என்னே பிறவி பெறுவது?
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலீர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே


எனும் திருமூலர் திருமந்திரம் சொல்லி இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிய உரையினைத் தொடங்குவோம்..


எண்ணற்ற அறிஞர்களாலும், அவதார புருஷர்களாலும் எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் எளிமையான மற்றும் அதன் மூலப் பொருளினை உணரும் ஒரு முயற்சி தான் இந்த பதிவின் நோக்கம்.


ஸ்ரீ சங்கராச்சாரியார், மகா பெரியவர் தனது கீதா பாஷ்யத்தின் முகவரையில் “ஸமஸ்த - வேதார்த்த ஸார - ஸங்க்ரஹபூதம” என இதைக் கூறியுள்ளார். இது ஏதோ இந்துக்களின் எந்த ஒரு வகுப்பினருடையதும் அன்று. எல்லோருக்கும், எல்லாவித மனிதர்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்ட ஒரு அறநெறியாகும். 


பகவத்கீதை எனும் இந்த யோக முறை முதன் முதலில் சூரியதேவனுக்கு சொல்லப்பட்டது பின்னர் சூரியதேவன் அதை மனுவுக்கும், மனு இசஷ்வாகுவுக்கும் விளக்கியதாகவும் கண்ணன் அர்ஜூனனிடம் சொல்கிறார். இவ்விதமாக ஒருவர் பின் ஒருவராக சீடர் பரம்பரையில் இந்த யோக முறை வந்து கொண்டிருந்தது. காலப் போக்கில் மறைந்துவிட்டதால் குருட்சேத்திரப் போர்களத்தில் இப்போது அர்ஜூனனுக்கு உபதேசிக்க வேண்டிவந்தது என்றும் சொல்கிறார்.


ஆம் இந்த ஸ்ரீமத் பகவத் கீதை என்ன சொல்கிறது. பிற நூல்களுக்கும், காப்பியங்களுக்கும், காவியங்களுக்கும் இல்லாத பெருமை ஏன் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வந்தது என்று யோசித்தீர்களேயானால், அது மிக எளிது. 


ஸ்ரீமத் பகவத் கீதை என்பது, பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதே பகவத்கீதையின் நோக்கமாகும். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறான், அவன் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும், தன்னுடைய செயல்கள் அத்தனையும் தோல்விகளில் முடிகிறது என்றும் அச்சுறுகிறான், மேலும் அவன் தனக்கு போல் வேறு எவரும் இத்தகைய சூழ்நிலை அனுபவிப்பதில்லை என்றும் நினைத்து கதறி அழுகிறான். அந்த சூழ்நிலையில் தனக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி தன்னை வழி நடத்திச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கிறான். இத்தகைய துன்பம் என்பதில் உழல்வது, மழைக்காக மண் எப்படி காத்து இருக்குமோ அது போல் ஆகும். மழை வந்ததும் மண் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, அழகாக அதில் விதைக்கப்பட்டுள்ள விதையினை விருட்சமாக்க முயல்கிறது. அது போல தான் அர்ஜூனன் குருட்சேத்திரப் போர்களத்தில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போர் புரிய தயாராக இருக்கும் கௌரவர்களைப் பார்த்து நிலை குலைந்து போனான். தன்னால் போர் புரிய இயலாது என்று தேரிலே சாய்ந்து உட்கார்ந்து விடுகிறான். இந்த சூழ்நிலையில் தான் மதுசூதணன் கண்ணன் வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்கிறான். அதுவே கீதா உபதேசம் ஆகும். 


இதனை எளிமையாகச் சொல்லவேண்டுமேயானால் துன்பம் என்னும் வாயில் வழியாகத் தான் ஞானமாகிற அரண்மனையில் பிரவேசிக்க முடியும் என்று அமைகிறது ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் அத்தியாயம் அர்ஜூன விஷாத யோகம்.


இது ஏதோ போர்களத்தில் அர்ஜூனனுக்கு சொல்லப்பட்ட ஒரு கருத்தாக எண்ணாமல் அதன் உள்ளிருக்கும் ஆழ்ந்த கருத்துகளை நாம் நோக்க வேண்டும். பகவானுடைய சொல்லிற்குச் செவிசாய்க்கும் ஒவ்வொருவருக்கும் கேட்கும் ஒலி இது. துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் புத்துயிர் அளிக்கும் மந்திரம் இது. “உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராபய வரான் நிபோதத” என்பது ஆகும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பலனை எய்துகிறான். இதில் கீதையின் முழு ரகசியமும் ஆழ்ந்து உறைகிறது என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 


சுருங்கச் சொன்னால் எவன் ஒருவன் ஆசையினைப் பின்தொடர்ந்து செல்கிறானோ அவன் தன் வாழ்வில் நிச்சயம் சிற்றின்பத்தில் லயித்து பேரின்பத்தினை கோட்டை விட்டு விடுகிறான். 


பகவத் கீதை “கீதோபநிஷத்” என்றும் அறியப்படும், வேத இலக்கியங்களில் மிக முக்கிய உபநிஷதமான இந்நூல் வேத ஞானத்தின் சாரமாகும். இந்த ஸ்ரீமத் பகவத்கீதை என்பதைப் புரிந்து கொள்ள முதலில் நாம் குறைந்த பட்சம் தத்துவரீதியாக ஸ்ரீகிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடக்கமான நிலையில் நம்மால் ஸ்ரீமத் பகவத்கீதையைப் புரிந்து கொள்ள இயலும். ஸ்ரீமத் பகவத்கீதை ஆழ்ந்த புதிரானதால் அடக்கமான நிலையில் பயின்றாலன்றி புரிந்துகொள்ளுதல் மிகக் கடினமாகும். 


மேலும் பல சுவாரசிய தகவல்கள் மற்றும் இதன் ஆன்மீக, பௌதிக கருத்துகளுடன் நாளை சந்திப்போம்.


அது பற்றிய ஒரு சிறு குறிப்பு:


1. ஆளப்படாத ஒரு பொருளைத் தோற்றுவிக்க முடியுமா?


2. பௌதிக இயற்கை என்றால் என்ன?


3. மூன்று குணங்கள் என்ன என்ன?


4. கர்மம் என்றால் என்ன? ஸ்ரீமத் பகவத்கீதையில் இதற்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று மேலும் பல சுவாரசியத் தகவலுடன் நாளை சந்திப்போம்..


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாடு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


என்று சொல்லி இன்று நிறைவு செய்கிறேன் ... பிரிவோம், சந்திப்போம்

Monday 16 January 2012

திருமணம் பாகம் - 3


விருப்பம் யாதென கேட்டேன் அவர்களிடம்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றான்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றாள்
விருப்பம் இரண்டாய் போனதால் விரும்பவில்லையோ...

விருப்பம் தனித்து ஒருவனுக்கோ ஒருவளுக்கோ
விருப்பம் சேர்ந்தே வரும் சிலநேரம்
விருப்பம் வரும் தன்னாலே ஆசையினால்
விருப்பம் விரும்புதலின் ஆரம்பம் சிலருக்கு...

விருப்பம் பிரிவுகளின் ஆரம்பம் பலருக்கு
விருப்பம் யாதெனில் விரும்புதலும் அடைதலும்
விருப்பம் நிறைவேற தியாகங்கள் வேண்டும்
விருப்பம் நிறைவேற சிலபல வேண்டும்...

விருப்பம் அடைதலில் இருந்தால் விரும்புமோ
விருப்பம் அடையா விட்டால் வெறுக்குமோ
விருப்பம் உதட்டோடு கொள்ளாமல் உளதோடு
விருப்பம் இருப்பின் எண்ணம் எளிதாகும்...

விருப்பம் அடைதலின் இன்பமே விட்டுக்கொடுத்தல்
விருப்பம் இருவரில் ஒருவரின் விருப்பம்
விருப்பத்தோடு விட்டுக் கொடுங்கள் விரும்பியவர்க்கு
விருப்பம் நிறைவேறும் விட்டுக்கொடுத்தவருக்கு தன்னாலே..

திருமணம் பாகம் - 2


ஒத்த வில்லை மனமென்றால் ஒன்றாக
ஒத்தாத மனங்கள் இணைந்தென்ன லாபம்
ஒத்த வில்லை உளமென்றால் ஒன்றாக
ஒத்தாத உளங்களில் உயிர்ப்புகள் இல்லை...

ஒத்து வாழ்தல் பெரும் திட்டமல்ல
ஒத்து போதல் பெரும் பாடுமல்ல
ஒத்து செல்லுதல் பெரும் கடினமல்ல
ஒத்து இருத்தல் விட்டுக் கொடுத்தலே...

ஒத்த கருத்துகளை மிஞ்ச போவதில்லை
ஒத்தாத கருத்துகள் விஞ்ச போவதில்லை
ஒத்தும் ஒத்தாதவைகள் கெஞ்சும் சிலநேரம்
ஒத்த மனதை நஞ்சாக்கும் பலநேரம்...

ஒத்து போதல் விட்டுக் கொடுத்தலே
ஒத்து போங்கள் விருப்ப மிருந்தால்
ஒத்து இருங்கள் சுய மிருந்தால்
ஒத்து ஒத்திருங்கள் தனிமை பாதிக்காமல்...

திருமணம் பாகம் - 1


ஒன்றாய் தான் பிறந்தோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
ஒன்றாய் காலம் இருந்தது
ஒவ்வொன்றாய் இருந்த நாம்...

ஒன்றோடு ஒன்று பற்று வைத்தோம் சிலர்
ஒன்றோடு ஒன்று மோகம் கொண்டோம் சிலர்
ஒன்றை கடத்த முயன்றோம் ஒன்றாகி
ஒன்றில் முடியாததை இரண்டில் முயற்சித்தோம்....

ஒன்றில் ஒன்றி போயினர் சிலர்
ஒன்றில் ஒன்றைத் தேடினர் சிலர்
ஒன்றை வைத்து ஒன்றைத்தேடினர் சிலர்
ஒன்றுக்காக ஒன்றாய் தேடினர் சிலர்..

ஒன்றில் ஒன்று சேர்ந்து இரண்டானது
ஒன்றில் சேர்ந்ததால் பல உருவாயின அந்த
ஒன்றில் தானே உலகமே லயித்திருக்கு
ஒன்றுக்காகத் தானே உலகமே இயங்கியிருக்கு...

இரண்டில் மனம் போராடும் வேரோடு
இரண்டில் மனம் துடிக்கும் உயிரோடு
இரண்டில் மனம் சிதையும் உணர்வோடு ஆனால்
இரண்டில் மட்டுமே உலகம் இயங்கும்....

இரண்டில் இருவர் இல்லை ஒத்த மனமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உளமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உயிரே
இரண்டில் இருவர் இல்லை யோசியுங்கள்...

ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ!!!!

தண்டாய் தாமரை மலர் போல்மேனி
நீண்டாய் காதல் கொண்டு அதனால்
வண்டாய் மலர் மாலை சுற்றி
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

கண்டாள் காதல னாய் கண்ணனை
செண்டாய் மலர்மாலை தனை சூடி
கொண்டாள் காதல் மோக மிட்டு
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வேண்டி விரும்பி யிருந்தன ளோ
ஈண்ட பிறவியின் பயன் பெறவோ
அண்ட மறிய விரத மிருந்தாளோ
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வண்டாடும் மலர் சோலைப் போல
திண்டாடும் மனதெல்லாம் பாகன் நினைப்பாலே
கொண்டாடும் நிரலெ ல்லாம் உயிர்த்தாளே
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

அண்டிட காதல் அவன் பாலே
வெண்டிட காதல் அவன் மேலே
நவிண்டிட பாவையும் காதல் மொழியாலே
ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ

Tuesday 10 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 5 (கடைசி பாகம்)

செட்டி யாரென்று வரலாறு பார்த்தால்
செட்டு என்றால் வணிகம் என்றும்
செட்டு என்றால் சிக்கனம் என்றும்
செப்பினவோ பழம் பாடல்கள் நிறையாக…

சாத்தனாய் முதல் மூன்று நூற்றாண்டுகள்
சாத்தன் எனப் பெயரிட்டனரோ வணிகரை
சாத்தன் மருவி தேசியெனப் பெயரிட்டனரோ
சான்றாய் பாடல்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில்…

எட்டியாய் மருவினரோ பாண்டிய காலத்தில்
எட்டியெ ன்றால் வணிகமும் கப்பலோடு
எட்டாத தூரமெல்லாம் எட்டிப் பார்த்தனரோ
எட்டாத பொருளெல்லாம் ஈட்டி மகிழ்ந்தனரோ…

பொருள் கொடுத்து பொருள் வாங்கி
பொருளாய் பர்மா தேக்குகள் கதவுகளுக்கோ
பொருளாய் பெல்ஜியம் கண்ணாடிகள் பார்த்திடவோ
பொருளாய் பிரெஞ்சு பீங்கான் சாமான்களோ…

வீணாய் பொருள் வாரி யிடார்
வீணாய் பொருள் வாங்கி யிடார்
வீழும் உடம்பு உள்ள வரை
வீழாது இவர் கொடை உலகமெல்லாம்…

ஆண் மகவு பிறந்திட்டால் ஒருபுள்ளி
ஆண் புள்ளி கணக்கிட்டால் இவருலகம்
ஆதி பகவன் ஆலய பணி
ஆதரவாய் செய்திடுவர் ஆர்வமாய் இருந்திடுவர்…

செட்டிநாடு பரப்பளவோ 657 சதுரமைல்கள்
செட்டியார் சேவையோ உலக மெல்லாம்
செட்டிநாடு குலமரபு கோவில்கள் ஒன்பதாம்
செட்டியார்கள் தொழுதிடுவர் மரபு வழியெல்லாம்..

செட்டிநாடு கிராமங்களோ எழுப்பத்திறாய் குறைந்தனவாம்
செட்டிநாடு கிராமங்கள் மாறினவோ நகரமாய்
செட்டிநாடு அமைந்தனவோ கீழைக் கடற்கரையில்
செட்டிநாடு சொல்லிடுமோ பல கதையெல்லாம்…

செட்டிநாடு வாருங்கள் ஆலயங்கள் கண்டிடலாம்
செட்டிநாடு வாருங்கள் உபசரிப்பில் மகிழ்ந்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் உணவுகளை ருசித்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் தொன்மையில் மயங்கிடலாம்

செட்டிநாடு நோக்கி வாருங்கள் தோழமைகளே!!!!

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 4


மணியாகிப் போச்சு மதியமும் முடிஞ்சது
மதிய உணவே உண்ட மயக்கம்
மணிக்கணக்கில் கிறங்கி அடிச்சதே ஆச்சி
மதியம் முடிந்தது மாலை வந்ததே...

மாலை என்னவேணும் ஆச்சி பட்டியிலிட
மனோலம் மாவுருண்டை எடுத்து வரட்டுமா
மசாலா சீயத்தோடு இனிப்புசீயமும் தரட்டுமா
மகிழம் புட்டோடு அரிசிபுட்டு தரட்டுமா...

கவுனிஅரிசி தட்டுல வச்சு தரட்டுமா
கந்தரப்பம் கல்கண்டு வடையோடு தரட்டுமா
கருப்பட்டி பணியாரம் செஞ்சு தரட்டுமா
கனிந்து உருகவைக்கும் கொழுக்கட்டை தரட்டுமா...

அதிரசம் சுட்டு தட்டோடு தரட்டுமா
அப்பமோடு தேங்குழல் வெச்சு தரட்டுமா
அல்வா கோதுமையில செஞ்சு தரட்டுமா
அல்வா பீட்ரூட்லயா கேரட்டுல வேணுமா..

இது எல்லாம் சாப்பிட நாளாகும்
இதுக்கு அப்புறம் சாப்பிட மாளாது
இதுவே போதுமுன்னு கவுனி அரிசியோடு
இடைப்பலகாரம் சீடையும் சீப்பு சீடையுமே...

ஏழு அடிக்க ஓயல கடிகாரமுமே
ஏழு மணிக்கே ஆச்சி கேட்டாக
ஏழாகிப் போச்சு தம்பு என்னவேணும்
ஏழுதானே ஆச்சு என்றேன் ஆச்சியிடம்...

இரவு பலகாரம் என்ன வேணும்
இடியாப்பம் தேங்காய் பாலோடு வேணுமா
இடியாப்பம் தாழிச்சு தரட்டுமா சட்னியோடு
இட்லி மெதுவாக அவிச்சு தரட்டுமா...

கல்தோசை இரண்டு வச்சு தரட்டுமா
கல்கண்டு சாதம் செஞ்சு தரட்டுமா
கதம்ப சட்னியோடு இளந்தோசை தரட்டுமா
கலந்த அவியலோடு அடை தரட்டுமா

ஊத்தப்பம் வேணுமா கார சட்னியோடு
ஊரின் பெயர் சொல்லும் சமையலிலே
ஊர் விட்டு வந்த என்னை
ஊறித் திளைத்து மலைத்துப் போனேன்..

இரவு எட்டாகிப் போச்சு உணவோடு
இரவு உணவாக இட்லியோடு சட்னியும்
இனிப்பு கல்கண்டு சாதமும் சேர்ந்து
இனிதாக கனிந்தது முதல் நாள்...

இன்னும் தொடரும் - கடைசி பாகம்
(செட்டிநாடு பற்றி, (புள்ளி)விவரம்)

Monday 9 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 3 (உணவு பழக்க வழக்கம்)

மெதுமெது இட்லியோடு கதம்ப சட்னியுமா
மெத்மெத்தென்று பணியாரத்தோடு மிளகாய் சட்னியுமா
மெதுவான வடையோடு தேங்காய் சட்னியுமா
மெருதுவாய் சாப்பிட காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இலையோடு இடியாப்பம் கோஸ்மல்லி துணையுமா
இனிக்கும் தேங்காய்பாலோடு இடியாப்பம் செய்யட்டுமா
இடிச்ச அரிசியோடு குழாபுட்டு வேணுமா
இனிப்பு உக்காரையும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

இனிப்பு பணியாரம் கார பணியாரமா
இதுக்கு துணையாக இடிச்சமிளகாய் சட்னியுமா
இளந்தோசை முருகலாக நாலைந்து தரட்டுமா
இதுல எதுவேணும் காலபலகாரம் ஆச்சிகேட்டாக...

காலபலகாரம் மெதுஇட்லியோடு மிளகாய் சட்னியுமாய்
காலமெல்லாம் நினைத்திருப்பேன் ருசியோடு சுவையுமே

மதியம் வந்துடும் மறுபடியும் ஆச்சி பட்டியலிட
மதியம் என்ன வேணும் முழுநீளப் பட்டியலிட
மதியம் அரிசி சோறும் பதமாய் கதம்ப சாம்பாரும்
மல்லி ரசமும் மிளகு காரகுழம்பும் வேணுமா

அரிசி சோறு தனியாக வெண்மையிலே
அரைச்ச புளிமிளகாய் புளியோதரை வேணுமா
அரிஞ்ச தேங்காய்பூவோடு தேங்காய்சாதம் வேணுமா
அள்ள அள்ளதூண்டும் பிரியாணி வேணுமா

இளங்குழம்பு வேணுமா பருப்புருண்டை குழம்பா
இஞ்சி மிளகாய் சேர்த்த புளிகுழம்பா
இளஞ்சூட்டில் வறுப்பட்ட கார கத்திரிக்காயா
இலையின் ஓரம்வைக்க வாழைக்காய் வறுவலா

உருளையோடு கேரட்டும் பட்டானி பிரட்டலா
உருண்டை குழம்புக்கு முட்டைக்கோஸ் துவட்டலா
உமிழ்நீர் கீழேவிழும் வெண்டைக்காய் புளிமண்டியா
உருளை வறுவலா ஆவக்காய் ஊறுகாயா

தயிரும் உண்டு கரைத்த மோருமுண்டு
தலைவாழ இலைநிரம்ப வெஞ்சனம் செய்யட்டுமா
தனக்கு வமையி ல்லாத தரணியிலே
தனிச் சமையல் செட்டிநாடு பாணியிலே

இளநீர் பாயாசமா நுங்கு பாயாசமா
இதுக் கெல்லாம் முன்னாடி சூப்வேணுமா
இது முடிச்ச பின்னாடி பீடாவேணுமா
இத்தனையும் கேட்டே பசி போச்சு
இன்னும் வாய்விட்டு அகலலையே சுவையாச்சி...

இன்னும் தொடரும் - இரவு டிபன் மற்றும் சொல்லாடல்கள்

Sunday 8 January 2012

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 2


வாயெ ல்லாம் சிரிப்பு வெச்சு
வார்த்தையெ ல்லாம் அன்பு வைச்சு
வாசல் வந்து வாய்நிறைய அழைச்சாக
வாஞ்சையான சொல்லெடுத்து செட்டிநாடு பாஷையிலே...

ஆச்சி அக்காவும் ஆத்தா அம்மாவும்
ஆசையாய் ஆயாவும் அப்பத் தாளும்
ஆயாவோடு அய்யாவும் அய்த்தான் மச்சானும்
ஆசையாய் அழைச்சாக அன்பான வீட்டுக்குள்ள

தம்பு தம்பியும் சின்னவள் தங்கையும்
தன் பங்கு அன்போடு அழைச்சாக...

முகப்பு வளைவினிலே முழுசாய் நிற்கையிலே
முகப்பு நிலையே கவிதை பலசொல்லும்
முகப்பு உத்திரமும் தொங்கு சரவிளக்கும்
முகப்பழகே முகவரியாம் பல வீட்டிற்கு...

முகப்பு திண்ணையிலே அய்யாவும் கணக்கரும்
முகச் சிரிப்பில் முழுமையாய் அழைச்சாக
முகப்பு முடிஞ்சா பெருசா முற்றமாம்
முகப்பும் முற்றமும் முழுநீளக் கதைசொல்லும்...

முற்றம் வான் பார்த்து இருக்கும்
முற்றத்தின் ஓரத்திலே துளசி மாடம்
முற்றம் சுற்றியே அடுக் அடுக்காய்
முற்றத் தினோரத்தில் அழகாய் அறைகள்...

முடிஞ்சத்துன்னு பார்த்திருந்தா சமையல் கட்டு
முக்கால் சமையலறை மீதமோ உணவறை
முழுசாய் சொல்ல தனிகவிதை வேண்டும்
முழுசும் முடிக்க ஓர்நாளும் வேண்டும்...

முகப்பு திண்ணையிலே ஒய்யாரமாய் ஊஞ்சலிலே
முகம் கழுவி கால் கழுவி
முக மலர அமர வைத்து
முதல் பானம் ஆரம்பம் காபியோடு...

இன்னும் தொடரும் - அடுத்தது உணவு உபசரிப்பு...

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 1


ஆறுமாசம் காத்திருந்து ஆறுதலாய் பார்த்திருந்து
ஆறுமாசம் போனதேம்மா வேகமா நாட்காட்டியில்
ஆசையாய் பார்க்க ஆகும்திட்டம் போட்டேன்
ஆருயிர் நண்பன் ஆவலோடு அழைத்தமைக்கு...

அலைந்து திரிந்து அலுவல் அலுத்து
அசைந்தும் அசையா உடல் பெருத்து
அட்டைப் பெட்டியில் அத்தனை கனவும்
அடுக்கி அழகுப் பார்த்து அடங்கிட்ட நானும்...

ஆயிரம் மைல் கடந்து ஊர்ந்து
ஆயிரமாயிரம் மனிதர்கள் கடந்து ஏறி
அடுக்கிய பெட்டியில் அணிவரிசையில் அமர்ந்து
அடுத்த ஊர் ஆத்தங்குடி என கனாகண்டு...

புகையிட்ட வண்டியில் புகையோடு மனதும்
புகையிட்டது உதடுகள் ஜன்னலோரம் குளிரில்
புத்தம்புது மனிதர்கண்டு புத்துயிர் பெற்றேன்
புதுதெம்பு யான் பெற்று புகுந்தேன் கனவினில்...

திங்கள் மதி நிலா வானில் பவணிவர
திகட்டாத பழசான நினைவுகள் நெஞ்சில்வர
தித்திக்கும் மனதோடு திளைத்து உறங்க
திருச்சி வந்தது திரும்பவும் தொடர்ந்தது...

அந்த ஊர் செட்டிநாடு பலகையோடு
அடுத்த ஊர் ஆத்தங்குடி என இறங்க
அந்த நாளும் இந்த நாளும் அன்பாய்
அக்கறையாய் அழைத்திட அனுப்பிய கார்...

ஊர் போகும் பாதையெல்லாம் மனையாச்சு
ஊர் வந்தும் தெரியலையே விளைபயிரும்
ஊர் வந்தது காதோடு குரல் இல்லையே
ஊர் ஆத்தா சொல்வாளே வாய்நிறைய் வாஎன்று...

ஊர் வந்தது ஊதி சென்ற புழுதிமட்டும்
ஊர் பேர் சொல்லி சென்றது மாறாமல்
வீதி வந்தது வாப்பா மகராசா
வீதியில் வரும் வார்த்தையில்லையே காதோடு...

வீதி முற்றி வீடும் வந்தது
வீதி வந்த கார் மட்டும் ஹாரன் அடித்தது
வீடு வந்த நண்பன் வாரி அழைக்க
வீடு வந்த மகிழ்ச்சியில் நான் திளைக்க...

வீடு முழுதும் காட்சிகள் நிழற்படமாய்
வீடு மட்டும் நாலு தெரு மொத்தமாய்
வீடு பார்க்க ஆகும் நாளும் கூட
வீட்டுக்குள்ள இருப்பவரோ காப்பவர் மூன்று...

இன்னும் பாக்கியிருக்கு.. தொடரும்...

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...