Friday 22 April 2011

நடை நேரம் (Walking)


ரோடெல்லாம் தார் 
ஆங்காங்கே பொட்டுகளாக 
என்றோ பெய்த மழை அரிப்பினால். 

இது ஒரு பொன்மாலை பொழுது 
இனிமையில்லை பாடலைப் போல்... 

இரவு குடை 
நட்சத்திரப் பொட்டிட்டு 
நிலவோடு உலா வந்தது. 

எனக்கும் அதற்கும் போட்டி 
எல்லா நாட்களிலும் 
என்னை வெற்றியிட்டது 
இன்று அழுதே 
இரவை நனைய வைத்தது.. 

ஏதோ அவசரம் 
வாகனங்களுக்கும் வாகனவோட்டிகளுக்கும்... 

சூரியனுக்கும் வாகனங்களுக்கும் 
நித்தம் நித்தம் போர் 
வெளிச்சத்தின் தாக்கம் 
எதில் அதிகமென்று.. 

சாலைக்குத் தானே வெளிச்சம் 
சாதனைக்கு இங்கு என்ன வேலை... 

பாதை மாறிய விளக்குகள் 
பாவம் பாதசாரிகள் 
பார்வையே பறிபோகும் - சில நேரம் 
வாழ்க்கையும் தான்... 

பாதசாரிகள் வழக்கம் போல் 
பாதை மாறிய பயணம் 
தார் ரோட்டில் உரிமையோடு... 

பாவம் பாதசாரிகள் 
பாதசாரிகளின் பாதையில் 
நடைபாதை வியாபாரிகள்... 

ஒலிப்பான் இல்லா வாகனம் 
ஒழிக்கப்பட்டு விடும் 
சக்கரம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை - இங்கு 
சத்தமில்லையென்றால் சங்கடம் தான்.. 

சாலைகள் 
வாகனங்களுக்கு மட்டுமல்ல 
பாதசாரிகளுக்கு மட்டுமல்ல 
மிருகங்களுக்கும் தான்... 

நாயோடு நடந்து 
மாடோடு சென்று 
மரணத்தை தினம் தொட்டுப்பார்க்கிறேன் 
வேகமான வாகனங்களுக்கு 
வேறு பாதையில்லாததால்... 

இப்படியான என் நடை 
பிரதான சாலை முடிந்து 
எங்கள் வீதி வந்தது... 

இது ஒரு தனிக் கதை... 

என் நடை பயணத்தால் 
கொழுப்பு குறைந்ததோ இல்லையோ 
பிரஷர் கூடியது 
நான் மாத்திரையைத் தேடி.... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...